பின்னோக்கு சாய்வு

பின்னோக்கு சாய்வு
Hindsight Bias

ஒரு நிகழ்வு நடந்த பின்னர் அது தவிர்க்க முடியாதது போல் தோன்றும் . ஆனால் அந்த நிகழ்வு நடப்பதற்கு முன்னர் அதனை அறிய முடியாது . நிகழ்வு ஒன்று நடப்பதற்கு முன்னரே அதனை அறிந்ததாக நினைத்துக் கொள்வது , அது சார்ந்த முடிவுகளை எடுப்பது , அதனால் இலாபம் பெற்றால் மனமகிழ்ச்சி அடைவது , நஷ்டம் அடைந்தால் துன்புறுவது பின்னோக்கு சாய்வு என்பதாக அழைக்கப்படுகிறது .

தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் . முடிவுகள் வெளி வந்த பின்னர் அது தவிர்க்க முடியாதது போல் தோன்றும் . ஆனால் வெளி வருவதற்கு முன்னர் அதனை அறிய முடியாது . முடிவு வெளி வருவதற்கு முன்னரே அதை நாம் அறிந்ததாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது பின்னோக்கு சாய்வு .

2000 ஆவது ஆண்டு பங்குச்சந்தையில் வெடித்த தகவல் தொழில்நுட்பக் குமிழியை உதாரணமாகக் கொண்டு இந்தப் பின்னோக்கு சாய்வைப் புரிந்து கொள்ள முயலலாம் . இன்ஃபோசிஸ் முதலான நிறுவனங்களின் வருமானம் மீமிகைப் பெருக்கத்தில் வளர்ந்து வந்த காலகட்டம் அது . சந்தை அதற்கு மூன்று இலக்க விலை - வருவாய் விகிதங்களை அளித்து அழகு பார்த்தது . Base effect என்பதாக ஒரு கருத்தாக்கம் இருக்கிறது . அதாவது ஒரு கோடி ரூபாய் வருமானத்தை இரண்டு கோடி , நான்கு கோடி , எட்டு கோடி என்பதாக இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்வது சுலபம் . ஆனால் 100 கோடி ரூபாய் வருமானத்தை இவ்விதம் இரட்டிப்பாக்குவது கடினம் . 1000 கோடி என்றால் அது ஒரு அடைய முடியாத இலக்கு . சராசரியை நோக்கிய பின்னடைவு (reversion to the mean) தன் வேலையைச் செவ்வனே செய்து விடும் . இன்ஃபோசிஸ் நிறுவனம் அப்போது குறைவான கோடிகளை வருமானமாக ஈட்டி அதனை வருடாவருடம் இரட்டிப்பாக்கிய வண்ணம் இருந்தது . ஆனால் இது தொடராது என்பது அப்போது பனி மூட்டத்துக்குள் இருந்தது . சந்தை , தகவல் தொழில்நுட்ப அலையில் ஏறிச் சென்றவண்ணம் இருந்தது .

இன்ஃபோசிஸ் பங்கின் மிகை விலை வருவாய் விகிதத்தை சரியாகக் கணித்து இந்த விலை உயர்வு வெகு நாட்கள் நீடிக்காது என்று ஒருவர் அதன் பங்குகளை விற்று விடுவதாகக் கொள்ளலாம் . அவர் விற்ற பின்னர் அந்தப் பங்குகள் உடனே விலை குறைந்து தன்னிலை அடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது . சர் ஐசக் நியூட்டனுக்கு South Sea நிறுவனப் பங்குகளில் இதே தான் நிகழ்ந்தது . நியூட்டன் , South Sea பங்குகள் அபரிமிதமான விலையில் வர்த்தகமாகிறதென்று சரியாகக் கணித்து அதன் பங்குகளை உயர் விலையில் விற்று இலாபத்தைக் கைப்பற்றி விட்டார் . ஆனால் அவர் விற்ற பின்னரும் பங்கின் விலை நாளும் உயர்ந்து சென்ற வண்ணம் இருந்தது . ஒரு கட்டத்தில் இந்த விலை ஏற்றத்தைத் தாங்க மாட்டாமல் மீண்டும் இந்த விலை ஏற்றத்தில் பங்கு பெறும் பொருட்டு நியூட்டன் அவற்றை உயர் விலையில் உயர் அளவுகளில் வாங்கியதும் அவை பின்னர் விலை வீழ்ச்சிக்கு உள்ளாகி அவர் ஆகப்பெரிய நஷ்டத்திற்கு ஆளானதும் வேறு கதை . வானத்து சந்திரன்களை அளந்தவரால் வையத்து மாந்தர்களின் உணர்வை அளக்க முடியவில்லை .

2008 ஆம் ஆண்டு வெடித்த sub prime crisis லும் இதே கதை தான் தொடர்ந்தது . நிலத்தின் மீதான முதலீடுகள் பணவீக்கத்தை ஒட்டியோ அல்லது அதற்குக் கொஞ்சம் கூடுதலாகவோ மட்டுமே வருமானத்தைத் தருவதாக இருக்கும் . ஆனால் 2008 ல் இந்த வருமானம் வானளாவிய உயரங்களை எட்டியது . This time is different என்று சந்தை ஆய்வாளர்கள் கூறிக் கொண்டனர் . அப்புறம் நடந்தது வரலாறு . ஆனால் இந்த வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதை நாம் உணர முடியாது .

சந்தை ஏற்றத்தாழ்வுகள் மட்டுமல்ல , தனிப்பட்ட பங்குகளின் ஏற்றத்தாழ்வுகளையும்  இவ்விதம் பார்க்கலாம் . ஒரு பங்கின் விலை நியாயமில்லாமல் உயரும் போது அதை நியாயப்படுத்த பல்வேறு காரணங்கள் சொல்லப்படும் . Man is not a rational animal but a rationalising one . மனிதர்களை நியாயமானவர்கள் என்று சொல்வதை விட எதனையும் நியாயப்படுத்துபவர்கள் என்று சொல்வது தான் சரி .

நிலையற்றவைகள் நாம் நினைப்பதை விட நீண்ட காலம் நீடித்திருக்கும் என்ற Morgan Housel ன் மணி மொழி இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .

பின்னோக்கு சாய்வின் பக்கம் சாயாமல் இருப்பது எப்படி ? பங்குச்சந்தையில் மட்டுமல்ல , வாழ்க்கையிலும் நீங்கள் எடுக்கும் முன் முடிவுகளின் குறிப்பேடு ஒன்றை எழுதி வாருங்கள் . அதில் உங்கள் முன் முடிவுகள் எத்தனை சதவீதம் நடந்த நிகழ்வுகளை ஒத்திருந்தது என்று ஒப்பிட்டுப் பாருங்கள் . 

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14