சமிக்ஞைகளும் சத்தங்களும்
சமிக்ஞைகளும் சத்தங்களும்
Signal Vs Noise
பங்குகளின் 52 வாரக் குறைந்த பட்ச விலைக்கும் 52 வார அதிக பட்ச விலைக்கும் ஏன் இத்தனை மாறுபாடு ? எது அதன் உண்மையான விலை ? அல்லது அதன் உண்மையான மதிப்பு ?
பங்குச்சந்தை ஒரு சிக்கலான தகவமைப்பு அமைப்பு (complex adaptive system) இதற்கு முதன்மையான காரணம் மனித உணர்ச்சிகள் முதலீடுகளுடன் முட்டி மோதுவது தான் . எலக்ட்ரான்களுக்கு உணர்ச்சிகள் இருந்தால் இயற்பியல் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்றே யோசித்துப் பாருங்கள் என்பதாக அறிவியல் அறிஞர் ஒருவர் கூறியிருப்பது பங்குச் சந்தைக்கு மிகவும் பொருந்துவதாக இருக்கிறது . இத்தகைய சூழ்நிலையில் நமது கவனத்தை எதில் நிலை நிறுத்துவது ? பங்குகளின் விலையிலா ? அல்லது அதன் மதிப்பிலா ? விலையில் கவனத்தைக் குவித்தால் இலக்கு விலை என்ற மாயமானைத் துரத்தி நம் இலக்கைத் தவற விட்டு விடுவோம் . மதிப்பு என்பதும் ஒரு நகரும் இலக்கு . நிறுவனப் பங்கு ஒன்று அதன் முழு மதிப்பை எட்டி விட்டது அல்லது அதன் மதிப்பிற்கும் மேலாக வர்த்தகமாகிறது என்று அதன் பங்குகளை விற்று விட்டு பின்னர் அது அதனது மதிப்பிற்குக் கீழாக வர்த்தகமாகிறது என்று வாங்க முனைவதையும் தொடர்ந்த வாக்கில் சரியாக யாராலும் செய்ய இயலாது . ஒரே பங்கை இவ்விதம் கவனித்துக் கொண்டிருந்தால் சந்தை தரும் புதிய வாய்ப்புகளை இனங்காண்பது கடினமாகி விடும் . எனில் பங்குகளை இனங்கண்டு மதிப்பு முதலீடாக வாங்கிய பின்னர் நம் கவனத்தை எதில் நிலை நிறுத்துவது ? வேறு மாதிரி சொல்வதானால் சந்தையின் சத்தத்தைப் புறக்கணித்து அது தரும் சமிக்ஞையை எப்படி ஆராய்ந்தறிவது ?
2008 ஆம் ஆண்டு நான் வாங்கிய Sundram Fasteners நிறுவனப் பங்குகளைக் கொண்டு இந்த நிலை நிறுத்துதலைப் புரிந்து கொள்ள முயலலாம் .
2008 ல் sub prime crisis ன் போது உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் தலைகுப்புற விழுந்தன . திடுதிப்பென்று அனைத்து நிறுவனப் பங்குகளும் மதிப்பு முதலீடாக மாறிய தருணம் . பணத்தடை இல்லாவிட்டாலும் மனத்தடையை வென்று பங்குகளை வாங்குவது சவாலான ஒரு விஷயமாக இருந்தது . ஏற்கெனவே செய்த பங்கு முதலீடுகளும் முதலீட்டுச் சுருக்கத்திற்கு உள்ளாகியிருந்த நேரம் அது . தற்காலிக மதிப்பிழப்பு நிரந்தர மதிப்பிழப்பு என்று வலைப்பூவில் எழுதுவது வேறு . நிஜமான கரடியைக் களத்தில் சந்திப்பது என்பது வேறு . மேலும் இவ்வளவு தான் சந்தையின் இறக்கமா அல்லது இன்னும் இறங்குமா என்பதான ஒரு எண்ணப்போக்கு . பெரிய கதையைச் சுருக்கமாகச் சொல்வதானால் சிறிய சிறிய அளவுகளில் பங்குகளை வாங்கி வைத்தது ஞாபகத்தில் இருக்கிறது . அப்படி ஒரு நூறு Sundram Fasteners பங்குகளை பங்கு ஒன்று 34 ரூபாய் என்ற விலையில் வாங்கிய புள்ளியிலிருந்து தொடங்கலாம் .
Sundram Fasteners பங்குகளைப் பொறுத்தவரை என்னுடைய அடிப்படைப் பகுப்பாய்வு one liner என்ற வகையில் ஒரு வரியில் அமைந்து விட்டது . நிறுவனம் தொடர்ந்தவாக்கில் உலகின் தரத்திற்கான மிக உயரிய விருதாகிய டெமிங் விருதை வென்ற வண்ணம் உள்ளது என்பதே அது . நிறுவனத்தின் பங்காதாயம் மற்றும் பங்கு ஈட்டு விகிதப் பட்டியல் :
Year - Dividend - Dividend Yield
2008 90 % 2.64 %
2009 50 % 1.47%
2010 90 % 2.64 %
2011 125 % 3.67 %
2012 140 % 4.11%
2013 140 % 4.11 %
2014 170 % 5 %
2015 175 % 5.14 %
2016 215 % 6.32 %
2017 450 % 13.23 %
2018 469 % 13.79 %
2019 510 % 15 %
2020 415 % 12.20 %
2021 470 % 13.82 %
2022 645 % 18.97 %
பங்காதாயம் , நிறுவனத்தின் முக மதிப்பான ஒரு ரூபாய்க்கானது . பங்கு ஈட்டு விகிதம் நான் பங்குகளை வாங்கிய விலையான 34 ரூபாயைக் கொண்டு கணக்கிடப்பட்டிருக்கிறது .
நிறுவனம் வழங்கிய பங்காதாயம் ஒரே சீராக உயரா விட்டாலும் அதன் உயர்வு சாய்வைக் (upward bias) கவனிக்க வேண்டுகிறேன் . இந்த உயர்வு சாய்விலும் நிறுவனத்தின் பங்காதாய வழங்கல் விகிதம் ( dividend payout ratio) குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் . இதனைச் சற்று விளக்கலாம் என்று தோன்றுகிறது . அதாவது நிறுவனத்தின் இலாபம் உயர்ந்து கொண்டே வருகிறது . நிறுவனம் வழங்கும் பங்காதாயம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அது வழங்கும் பங்காதாய வழங்கல் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது . இந்தத் தக்கவைக்கப்பட்ட வருமானத்தை (retained earnings) நிறுவனம் கடனை அடைக்கும் பொருட்டோ அல்லது விரிவாக்கச் செலவுகளுக்கோ அல்லது பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தவோ பயன்படுத்திக் கொள்ளலாம் . நிறுவனத்தின் கடன் பங்கு விகிதம் 2008 ல் 1.31 என்ற அளவிலிருந்தது . தற்போதைய கடன் பங்கு விகிதம் 0.18 என்ற அளவில் உள்ளது .
2008 ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்த பங்காதாயம் 90 ரூபாய் . தற்போதைய பங்காதாயம் 645 ரூபாய் . பங்கு ஈட்டு விகிதக் கணக்கில் சொல்வதானால் 2008 க்கான பங்கு ஈட்டு விகிதம் 2.64 சதவீதம் . தற்போதைய பங்கு ஈட்டு விகிதம் 18.97 சதவீதம் . இந்த உயர் வருமானத்தைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் விலை 29 மடங்கு கூடியிருக்கிறது . தற்போது ஒரு பங்கின் விலை 1000 ரூபாய் .
2008 ல் மீமிகைக் கரடிச்சந்தையின் காரணமாக நிறுவன PE குறை அளவுகளில் இருந்தது . நிறுவனத்தின் தற்போதைய PE 44.15 என்ற உயர் அளவில் உள்ளது . ஆக EPS மூலமான வளர்ச்சி ஒரு புறம் . PE விரிவாக்கம் மூலமான வளர்ச்சி மறு புறம் . இந்த நிறுவனப் பங்கு மட்டுமின்றி அனைத்துத் தரமான பங்குகளும் இந்த வகையில் தான் செல்வ வளத்தை உருவாக்குகின்றன .
2008 க்கும் 2022 க்கும் ஆன இந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ஆண்டாண்டு ஒரே சீராக உயரவில்லை . எந்த நிறுவனத்தின் வருமானமும் இந்த மாதிரி சீராக உயராது . ஏறி இறங்கி இறங்கி ஏறித் தான் நிறுவனம் இந்த நிலையை அடைந்திருக்கிறது . இது ஒரு பக்கம் . நிறுவனத்தின் முன்னேற்றத்தைத் தொடரும் அதன் பங்கின் விலைகள் முதலீட்டாளர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக இன்னும் வன்மையாக ஏறி இறங்கும் .
மதுரையிலிருந்து சென்னைக்குப் போகும் இரயில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சரியான நேரத்தில் சென்று நின்று தன் பயணத்தை நிறைவு செய்யாது . ஓரிடத்தில் சமிக்ஞை கிடைக்கத் தாமதமாகலாம் . ஆனால் பெரும்பாலான சமயங்களில் சென்னையை சரியான நேரத்தில் சென்றடைந்து விடும் . நிறுவனங்களும்
அதே மாதிரி தான் . ஒவ்வொரு காலாண்டு மற்றும் ஆண்டாண்டுக் கணக்கில் ஒரே சீராக வருமானத்தை ஈட்டாது . ஆனால் தரமான நிறுவனங்கள் ஆண்டாண்டுகளின் கணக்கில் சராசரியாக தரமான வளர்ச்சி என்ற இலக்கை எட்டி விடும் .
இப்போது எங்கு பார்த்தாலும் மின்சார வாகனங்கள் என்ற பேச்சாகவே இருக்கிறது . எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் மட்டுமே இருக்கும் என்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது .
அந்த வகையில் பார்த்தாலும் Sundram Fasteners நிறுவனம் மின்சார வாகன உதிரி பாகங்கள் தயாரிப்புக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது . அண்மையில் அதற்குக் கிடைத்த 2000 கோடி ரூபாய் மதிப்புக்கான ஒப்பந்தம் இதற்கான ஒரு சான்றாகும் .
பங்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நமது 6 அளவுருக்களையும் நிறுவனம் பூர்த்தி செய்வதாக இருக்கிறது .
1. முதல் நீர்க்காமை - இலவசப் பங்களிப்பின் மூலமாக மட்டும் முதல் (capital) கூடியிருக்கிறது .
2. கடன் இல்லாமை - கடன் பங்கு விகிதம் (debt equity ratio) 0.18 என்ற குறை அளவுகளில் இருக்கிறது .
3. தரமான வளர்ச்சி - நிறுவனம் வருமானத்தின் மேல் வருமானம் ஈட்டுகிறது .
4. அகழி - நிறுவனத்தின் தரம் அதன் அகழியாகச் செயல்படுகிறது .
5. நிறுவனர் பங்கு - நிறுவனத்தில் நிறுவனர் பங்கு 48.5 % என்ற அளவில் உள்ளது .
6. அறம் - நிறுவனத்தின் தரமே அதன் அறமாகவும் செயல்படுகிறது .
இன்னும் சொல்லப்போனால் நிறுவனத்தின் தரமே அனைத்துக்குமான அதன் ஆதாரமாக உள்ளது . நிறுவனத் தயாரிப்புகள் தரமாக இருப்பதால் புதிய வாய்ப்புகள் அதனைத் தேடி வருகின்றன . இதனால் நிறுவனம் இலாபத்தின் மேல் இலாபம் ஈட்டுகிறது . மேலும் இந்தப் பணத்தைக் கொண்டு கடனை அடைத்துக் கொள்கிறது . இவ்வாறு தரமே அதன் அகழியாகிறது . மேலும் புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டிய தேவை இல்லாததால் நிறுவனர் பங்கு நிறுவனத்தில் பாதி என்ற உயர் அளவுகளில் உள்ளது .
நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரி 2008 ஆம் ஆண்டு அதன் பங்கு முதல் (share capital) மாதிரி 19 என்ற மடங்கில் இருந்தது . தற்போது இது 120 மடங்காக உள்ளது . இவ்வாறு இருப்பு அதிகமாக இருப்பதால் நிறுவனம் இலவசப் பங்களிப்பை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது . மேலும் ஒரு ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றின் விலை 1000 ரூபாய் என்ற உயர் அளவில் உள்ளதால் சிறு முதலீட்டாளர்கள் வாங்க வசதியாக நிறுவனம் இலவசப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளலாம் .
வரும் காலங்களில் நிறுவனத்தை மேலாண்மை செய்ய அதன் அடுத்த தலைமுறை தயாராகி விட்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும் .
இந்தக்கதை இந்த அளவில் முடிவு பெறுகிறது . இந்தக் கதைக்கான மாற்றுக் கதைகள் அதாவது மாற்றுப் பாதைகள் சிலவற்றை முடிவாகப் பார்த்து விடலாம் .
2008 ஆம் ஆண்டு மீமிகைக் கரடிச்சந்தையில் Sundram Fasteners பங்கை இனங்கண்டு நான் வாங்கியதெல்லாம் சரி தான் . ஆனால் 100 பங்குகள் வாங்கிய இடத்தில் 1000 பங்குகளை வாங்கியிருக்கலாம் . அவ்வாறு வாங்கியிருந்தால் என்னுடைய பங்குத் தொகுப்பில் இந்தப் பங்கு ஒரு முக்கியமான நேர்ம வினையை ஆற்றியிருக்கும் . பங்குச்சந்தையில் அபூர்வமாகத் தங்க மழை பொழியும் போது நான் அதனைச் சின்னஞ்சிறிய குங்குமச்சிமிழ்களில் பிடித்துக் கொண்டிராமல் பெரிய பெரிய பொங்கல் பானைகளில் பிடித்திருக்க வேண்டும் . அல்லது தொடர்ந்த வாக்கில் அந்நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மேற்கொண்டிருக்க வேண்டும் . இந்த 15 ஆண்டுகளில் 25.29 சதவீத CAGR ( பங்காதாயம் கணக்கில் கொள்ளப்படவில்லை ) கொடுக்கக்கூடிய முதலீடு வேறு எங்கு கிடைக்கும் ? அல்லது பங்காதாயங்களை மறு முதலீடு செய்திருக்கலாம் . புதிய முதலீடுகளுக்கு உகந்த பங்குகளை வெளியில் தேடாமல் உங்கள் முதலீட்டுத் தொகுப்பிலேயே தேடுங்கள் என்ற பங்குச்சந்தை பழமொழி உண்மை தான் என்பதாகத் தோன்றுகிறது .
ஆக , Sundram Fasteners நிறுவனத்தைப் பொறுத்தவரை நாம் கவனிக்க வேண்டிய ஒரே சமிக்ஞை அதன் தரம் என்ற ஒரேயொரு அளவுகோலை மட்டுமே .
இவ்வாறாக பங்குச்சந்தையின் சத்தங்களைப் புறக்கணித்து அதன் சமிக்ஞைகளில் கவனம் கொள்ளுங்கள் .
எல்லாம் சரி , இப்போது இந்தப் பங்குகளை வாங்கலாமா ? நிறுவனம் என்பது வேறு . அதன் பங்குகள் என்பது வேறு . நிறுவனத்தின் தற்போதைய உயர் PE மதிப்பைக் கொண்டு கணக்கிடும் போது அபாய வெகுமதி விகிதம் (risk reward ratio) வாங்குவதற்குச் சாதகமாக இல்லை .
மீண்டும் சந்திப்போம் .
Comments
Post a Comment