பங்காதாயம் - பங்கு ஈட்டு விகிதம் என்ன தொடர்பு ?
பங்காதாயம் - பங்கு ஈட்டு விகிதம் என்ன தொடர்பு ?
பங்காதாயம் (dividend) பங்கின் முக மதிப்பைக் கொண்டு கணக்கிடப்படுவது . பங்கு ஈட்டு விகிதம் (dividend yield) பங்கின் விலையை வைத்துக் கணக்கிடப்படுவது . ஒரு சின்ன உதாரணம் சொன்னால் எளிதாகப் புரிந்து விடும் . Balmer Lawrie Investments நிறுவனம் 2022 ஆம் வருடத்திற்கு 300 சதவீதம் பங்காதாயமாக வழங்கியிருக்கிறது . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய் பங்காதாயம் . பத்து ரூபாய் முக மதிப்பைக் கொண்ட Balmer Lawrie Investments நிறுவனப் பங்கு , சந்தையில் தற்போது 381 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . 381 ரூபாய் கொடுத்து தற்போது அதன் பங்குகளை வாங்கும் முதலீட்டாளருக்கு 7.87 (30 × 100 ÷ 381) சதவீத வருமானம் மட்டுமே கிடைக்கப்பெறும் . இந்த 7.87 சதவீதம் தான் பங்கு ஈட்டு விகிதம் என்று அழைக்கப்படுகிறது .
தரமான பங்குகள் சந்தையில் ஒரு சதவீத பங்கு ஈட்டு விகிதம் என்ற அளவில் மட்டுமே வர்த்தகமாகும் (அதற்காக Balmer Lawrie Investments பங்கு தரமற்றது என்று நினைக்க வேண்டாம் . அது ஒரு பிறழ்வு ) வேறு மாதிரி சொல்வதானால் தரமான பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு அந்தப் பங்குகளின் மூலமான பங்காதாய வருமானம் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே . ஆனால் இந்த ஒரு சதவீதம் என்பது வருடாவருடம் அதிகரித்த வண்ணம் இருக்கும் . இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்க வல்ல பங்குகளின் விலையும் கூடிய வண்ணமாக இருக்கும் . விப்ரோ நிறுவனத்தை 1945 ஆம் ஆண்டு அதன் IPO வில் வாங்கி இன்றளவும் வைத்திருக்கும் முதலீட்டாளருக்கான பங்காதாயம் எவ்வளவு தெரியுமா ? 2296240 சதவீதம் . இத்தனை சதவீத பங்காதாயங்களைக் கொடுக்க வல்ல பங்குகளின் விலையும் கூட வேண்டுமல்லவா ? விப்ரோ நிறுவன IPO விலான 300 ரூபாய் முதலீட்டின் தற்போதைய மதிப்பு 46 கோடிகள் .
1945 ல் நாங்களெல்லாம் பிறக்கவேயில்லை என்பவர்களுக்காக 1978 ன் ஒரு உதாரணத்தையும் பார்த்து விடலாம் . 1978 ல் பிரிட்டானியா நிறுவனப் பங்கு பத்து ரூபாய் முக மதிப்பிலும் ஐந்து ரூபாய் உயர் மதிப்பிலுமாக (premium) பதினைந்து ரூபாய் என்ற விலையில் வெளியிடப்பட்டது . அதன் 100 பங்குகள் தற்போது நிறுவனத்தின் இலவசப்பங்கு மற்றும் பங்குப் பிரிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் 4410 பங்குகளாகப் பெருகியிருக்கும் . அதன் இன்றைய மதிப்பு (15.12.2022) கிட்டத்தட்ட இரண்டு கோடி . 2022 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் .
இன்னும் சமீபத்திய உதாரணம் வேண்டுமென்றால் HDFC வங்கியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் . 1995 லான அதன் 10000 ரூபாய் IPO முதலீட்டின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி . அதன் IPO முதலீட்டிற்கான 2022 ஆம் வருட பங்கு ஈட்டு விகிதம் 770 சதவீதம் . கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் .
இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமல்ல , தரமான நிறுவனங்கள் அனைத்தும் இவ்வாறு தான் சொத்துக்களை உருவாக்கியிருக்கின்றன. தரமான நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்ய வேண்டியது மற்றும் இந்த முதலீடுகளை ஆண்டாண்டு காலம் தொடர வேண்டியது ... படிப்பதற்கு எளிதாக இருக்கும் இந்தக் கருத்தாக்கம் கடைப்பிடிக்கக் கடினமாக இருக்கும் . விப்ரோ நிறுவன IPO 1945 ல் வெளி வந்தது . இன்று 2022 முடியும் தறுவாயில் இருக்கிறது . இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அந்த முதலீட்டைப் பணமாக்கம் செய்வதற்கான நியாயமான காரணங்கள் எழுவது இயற்கையே . 77 ஆண்டுகள் ஒரு முதலீட்டை விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது . ஆனால் இவ்விதம் முதலீட்டை ஒரு முதலீட்டாளரின் வாழ்நாள் முழுமையையும் கடந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றால் அதன் மதிப்புப் பெருக்க சாத்தியக்கூறுகளைச் சற்றே யோசித்துப் பாருங்கள் .
என் நண்பர்கள் சிலர் எப்போது பணமாக்கம் செய்வது என்று கேட்பது என் காதில் விழுகிறது . விப்ரோ நிறுவனம் 2022 ஆம் ஆண்டு பங்காதாயமாக 300 சதவீதம் வழங்கியிருக்கிறது . IPO முதலீட்டாளருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான பங்காதாயம் 6888720 ரூபாய் . ஒரு வருடத்திற்கு இவ்வளவு என்றால் மாதத்திற்கு கிட்டத்தட்ட ஐந்தரை இலட்சம் ரூபாய் வருகிறது . வெறும் 300 ரூபாய் முதலீட்டின் மூலமாக மாதத்திற்கு ஐந்தரை இலட்சம் கிடைக்கப்பெறுவது போதுமானது என்று நினைக்கிறேன் .
தரமான நிறுவனங்கள் பொதுவாக ஒரு சதவீத பங்கு ஈட்டு விகிதத்தில் வர்த்தமாகும் என்று பார்த்தோம் . கரடிச்சந்தையில் இதே நிறுவனங்கள் 3 சதவீதம் , மீமிகை கரடிச்சந்தையில் 6 சதவீதம் என்ற அளவில் வர்த்தகமாகும் . அந்த வகையில் Balmer Lawrie Investments முதலான பங்குகள் எப்போதும் மீமிகை கரடிச் சந்தையில் வர்த்தகமாவதாகவும் கொள்ளலாம் . ஒரு பங்கு ஒரு சதவீத பங்கு ஈட்டு விகிதத்திலிருந்து ஆறு சதவீத பங்கு ஈட்டு விகிதத்தை எட்டிப்பிடிக்க சில ஆண்டுகள் ஆகும் . கரடிச்சந்தையில் அத்தகைய பங்குகளை வாங்குவது காலத்தை வாங்குவதற்கு ஒப்பானதாகும் .
பொதுவாக பங்கு ஈட்டு விகிதம் பங்காதாயத்தை விடக் குறைவாக மட்டுமே இருக்கும் என்பது தெளிவு . அரிதான சில சந்தர்ப்பங்களில் பங்கு ஈட்டு விகிதம் பங்காதாயத்தை விட அதிகமாகவும் கிடைக்கப்பெறும் . மீமிகை கரடிச்சந்தை ஒன்றில் ஒருவர் ஒரு பங்கை அதன் முக மதிப்பிற்குப் பாதி விலையில் வாங்குவதாக ஒரு கற்பனை செய்யலாம் . அவருக்கான பங்கு ஈட்டு விகிதம் பங்காதாயத்தைப் போல் இரண்டு மடங்கு ஆகும் . அந்தப் பங்கு பத்து மடங்கு கூடியிருக்கிறது என்பதாகக் கொண்டால் பாதி விலையில் வாங்கியவருக்கு இருபது மடங்கு கூடி விடும் . இது வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டும் எழுதப்பட்ட ஒன்றல்ல . HDFC நிறுவனப் பங்கு அதன் ஆரம்ப காலங்களில் அதன் முக மதிப்பை விடக் குறைவான விலையில் வர்த்தகமானது . அவ்வளவேன் , நான் ஒரு சமயம் 5 ரூபாய் என்ற NAV வில் வாங்கிய பரஸ்பர நிதி எனக்கு இரட்டிப்பு பங்காதாயத்தை இன்னமும் வாரி வழங்கிய வண்ணமாக உள்ளது . எல்லோருக்கும் 12 சதவீதப் பங்காதாயம் என்றால் எனக்கு 24 சதவீதம் .
பங்காதாயத்திற்கும் பங்கு ஈட்டு விகிதத்திற்குமான இந்தத் தொடர்பு பங்குச்சந்தை நிதி விகித இணைப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும் . காளைச் சந்தையில் பங்கின் விலை கூடக்கூட பங்கு ஈட்டு விகிதம் குறைந்து கொண்டே வரும் . கரடிச் சந்தையில் பங்கின் விலை குறையக் குறைய பங்கு ஈட்டு விகிதம் கூடிய வண்ணமாக இருக்கும் . மிகை கரடிச் சந்தையில் பங்கின் விலை முக மதிப்பில் வர்த்தகமானால் பங்காதாயமும் பங்கு ஈட்டு விகிதமும் சமமாகும் . மீமிகை கரடிச் சந்தையில் பங்கின் விலை முக மதிப்புக்கும் குறைவாக வர்த்தகமானால் பங்கு ஈட்டு விகிதம் பங்காதாயத்தை விடக் கூடி விடும் . இதை சுலபமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சிறு வயதில் நாம் விளையாடிய ஏற்ற இறக்கப் பலகை (seesaw) விளையாட்டை நினைவு கொள்ளுங்கள். ஒரு முனையில் பங்கு விலை . மறு முனையில் பங்கு ஈட்டு விகிதம் . பங்கின் விலை உயர உயர பங்கு ஈட்டு விகிதம் குறைந்து விடும் . பங்கின் விலை தாழத்தாழ பங்கு ஈட்டு விகிதம் கூடும் .
சந்தையின் ஆதாரமான தன்மை என்னவென்று கேட்டால் அது ஏறி இறங்கும் தன்மை படைத்ததாக இருக்கிறது என்று சொல்லலாம் . ஒரு சிலர் சந்தையின் இந்த ஏற்ற இறக்கங்களைத் தாங்க மாட்டாமல் fixed income investments என்று சொல்லப்படும் கடன் பத்திரங்களில் மட்டும் முதலீட்டை மேற்கொள்வார்கள் . சந்தையின் ஏறி இறங்கும் தன்மையில் அபாயமும் வாய்ப்பும் பின்னிப் பிணைந்திருப்பதைக் கவனிக்க வேண்டுகிறேன் . ஏறி இறங்காத பாதுகாப்பான சந்தையில் முதலீட்டுக் குறுக்கம் என்று அழைக்கப்படும் பணவீக்கம் என்னும் ஆகப்பெரிய அபாயம் ஒளிந்திருக்கிறது . ஏறி இறங்கும் பாதுகாப்பற்ற சந்தையில் முதலீட்டுப் பெருக்கம் என்னும் நல்வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது .
சில நிறுவனங்கள் நல்ல இலாபம் ஈட்டினாலும் பங்காதாயங்களை வழங்காது . நிறுவனங்கள் பங்காதாயங்களை இலாபகரமாக மறு முதலீடு செய்யும் வரையில் பிரச்னையில்லை . வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவனம் அதன் ஆரம்ப காலங்களில் ஒரேயொரு முறை மட்டும் பங்காதாயத்தை வழங்கியிருக்கிறது . பஃபெட் அதனை அந்த ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் முகம் கழுவச் சென்ற போது வழங்கி விட்டதாக வேடிக்கை செய்வது வாடிக்கை . மற்றபடி பஃபெட் அவரது நிறுவனம் ஈட்டும் இலாபத்தை தொடர்ந்து இலாபகரமாக முதலீடு செய்து வருகிறார் . நிறுவனம் பங்காதாயத்தை வழங்காவிட்டாலும் பங்கின் விலையில் அது பிரதிபலிக்கும் . அவருடைய முதலீட்டு நிறுவனமான பெர்க்சயர் ஹாத்வேயின் ஒரு பங்கின் தற்போதைய விலை 468020 டாலர் . இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 3.8 கோடி .
Comments
Post a Comment