பங்குச்சந்தை பதில்கள் - 7

பங்குச்சந்தை பதில்கள் - 7


கேள்வி : புத்தாண்டு சபதங்கள் ஏதாவது ?

பதில் : வாரன் பஃபெட்டின் கடிதங்களை , வழுக்கு மரத்தில் ஏறுவது மாதிரி , முதல் நாலைந்து வருடங்கள் மட்டும் படிக்காமல் முழுமையாகப் படிக்க வேண்டும் . வாரன் பஃபெட்டின் முதலீட்டு உத்திகள் குறித்து ஏராளமான புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன . அவற்றில் பெரும்பாலானவற்றைப் படித்திருக்கிறேன் . எந்த எழுத்தானாலும் அதனுடைய மூலத்தை (source) படிப்பது சாலச் சிறந்தது . அந்த வகையில் வாரனின் கடிதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன .


கேள்வி : பங்குச்சந்தை முன் கணிப்பு ஏதாவது ?

பதில் : சந்தை குறித்த என் முன் கணிப்பு எப்போதும் ஒன்றே ஒன்று தான் . மேலும் அந்தக் கணிப்பு என்றும் தவறியதில்லை .அது நீண்ட கால அளவில் சந்தை முன்னேறிச் செல்லும் என்பதாகும் .


கேள்வி : IPO எதிலும் முதலீடு செய்தீரா ?

பதில் : நான் பொதுவாக IPO க்களில் முதலீடு செய்வதில்லை . OPO க்களில் மட்டும் தான் . அதாவது Old Public Offer களில் . அதே மாதிரி பரஸ்பர நிதிகளிலும் NFO கிடையாது . OFO மட்டும் தான் .


கேள்வி : Public market புரிகிறது . அதென்ன Private market ?

பதில் : சந்தையில் பட்டியலிடப்படாமல் இயங்கும் நிறுவனங்களின் சந்தை private market என்று அழைக்கப்படுகிறது . வாரன் பஃபெட் இத்தகைய சந்தையிலிருந்து தான் Nebraska Furniture Mart முதலான நிறுவனங்களை மொத்தமாக வாங்கிப் போட்டிருக்கிறார் . இத்தகைய நிறுவனங்களையும் வாரன் , மதிப்பு முதலீடாக மட்டும் வாங்குவார் என்பது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .


கேள்வி : பரஸ்பர நிதி முதலீடுகளில் பங்காதாயத் தேர்வு அல்லது வளர்ச்சித் தேர்வு இவற்றில் எது சிறந்தது ? ஏன் சிறந்தது ?

பதில் : வளர்ச்சித் தேர்வு மட்டுமே . நீண்ட கால அளவில் செயல்படும் பரஸ்பர நிதிகளின் நிகர சொத்து மதிப்பு (NAV) 1000 ரூபாய் என்ற விலையிலும் அதே நிதிகளின் பங்காதாயத் தேர்வு 50 ரூபாய் என்ற விலையிலும் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . ஏன் இந்த வேறுபாடு ? கொடுபடாத பங்காதாயங்களின் வளர்ச்சியின் மீதான வளர்ச்சியே இதன் காரணம் . கூட்டு வட்டியின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக்கூடாது என்பதாகும் . ஒரு பரஸ்பர நிதி  நீண்ட கால அளவில் 20 சதவீத கூட்டுப் பெருக்கம் கொடுக்கிறதென்றால் அதை அப்படியே வளர விடுவது தான் அறிவார்ந்த ஒரு செயலாக இருக்க முடியும் . மாறாக , நிதி தரும் பங்காதாயங்களை வாங்கி செலவழித்து விட்டால் கதை முடிந்தது . அல்லது வேறு நிதிகளில் முதலீடு செய்யும் போது அது குறைச் செயலாக்கம் புரிவதற்கான வாய்ப்பு உள்ளது . மேலும் இத்தகைய செயல்பாடுகளின் மூலமான உராய்வுச் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் . பஃபெட்டின் முதலீட்டு நிறுவனம் ஒரேயொரு முறை மட்டும் 10 சதவீத பங்காதாயம் ஒன்றை அறிவித்தது . அது தான் அதன் முதலும் முடிவுமான பங்காதாயமாகும் .


கேள்வி : நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் திவாலானால் அரசாங்கம் எதற்காக அவைகளைக் காப்பாற்ற வேண்டும் ? 

பதில் : ஏனென்றால் நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால் பிரச்னை அவைகளோடு மற்றும் நின்று விடாது . அது பல்வேறுபட்டவர்களையும் பாதிப்பதாக இருக்கும் .


கேள்வி : நிறுவனம் இலவசப் பங்களிப்பை மேற்கொள்வதால் தானே மதிப்பு உருவாக்கம் நிகழ்கிறது ?

பதில் : அல்ல , மதிப்பு உருவாக்கம் நிகழ்வதால் நிறுவனங்கள் இலவசப் பங்களிப்பை மேற்கொள்கின்றன .


கேள்வி : எவ்வளவு படித்தாலும் இந்த PE புரிபட கடினமாக இருக்கிறது ?

பதில் : இப்படி யோசித்துப் பாருங்கள் . நிறுவனம் ஒன்றின் பங்கை 52 என்ற PE ல் நீங்கள் வாங்குகிறீர்கள் . இதன் பொருள் என்னவென்றால் நிறுவனம் தற்போது ஈட்டும் நிகர இலாபம் மாதிரி எதிர் வரும் 52 வருடங்களுக்கும் ஈட்டும் என்பதாகக் கணக்கிட்டு இந்த 52 வருட நிகர இலாபத்தையும் இப்போதே கொடுத்து வாங்குவது என்பதாகும் . 52 வருடங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நிறுவனம் குறைச் செயலாக்கம் புரியலாம் . அல்லது மொத்தமாக திவால் ஆகவும் செய்யலாம் . PE ஐ எவ்வளவு குறைவாக வாங்க முடியுமோ அவ்வளவு குறைவாக வாங்க வேண்டும் . அதனினும் முக்கியமாக இவ்வாறு வாங்கப்படும் நிறுவனங்கள் வளர்ச்சி மேல் வளர்ச்சி காண்பதாக இருக்க வேண்டும் . கரடிச்சந்தை ஒன்றில் நிறுவனம் ஒன்றின் பங்கை 8 என்ற PE ல் வாங்குவதாகக் கொள்ளலாம் . இதன் பொருள் முன்பே பார்த்த மாதிரி நிறுவனத்தின் 8 வருட வருமானத்தையும் முன்னரே கொடுத்து வாங்குவதாகும் . நிறுவனம் வளர்ச்சி மேல் வளர்ச்சி காண்கிறது . அதன் 8 வருட வருமானத்தை 4 வருடங்களில் சம்பாதித்து விடுகிறது . நிறுவனம் இம்மாதிரி தொடர்ந்த வாக்கில் செயல்படுமானால் சந்தை ஒரு கட்டத்தில் அதற்கு உயர் அளவிலான PE மதிப்பை வழங்கியே தீரும் . EPS ஐயும் PE ஐயும் பெருக்கினால் பங்கின் விலை கிடைத்து விடும் என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் . இவ்வாறாக தரமான நிறுவனப் பங்குகளின் EPS நாளும் அதிகரித்துச் செல்லும் . இந்த அதிகரித்து வரும் EPS க்கு சந்தை கூடுதல் PE ஐ வழங்கும் . தரமான நிறுவனங்கள் கரடிச் சந்தையிலோ அல்லது இத்தகைய நிறுவனங்கள் தற்காலிகமான அதே சமயம் தீர்க்கப்படக்கூடிய பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் போதோ அவை குறை PE க்களில் வர்த்தகமாகும் . அப்போது இத்தகைய பங்குகளை மொத்தமாக வாங்கி வைத்து விட்டால் போதுமானது . வாரன் பஃபெட் , நிறுவனங்கள் அறுவை சிகிச்சை அரங்கில் இருக்கும் போது அவைகளை வாங்க வேண்டும் என்று கூறுவதன் பொருள் இது தான் . பின்னர் பிரச்னை தீர்க்கப்பட்டு காளைச்சந்தை வரும் போது EPS  அதிகரிப்பும் PE விரிவாக்கமும் பங்குகளின் முதலீட்டுப் பெருக்கத்திற்கு இட்டுச் செல்லும் . இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனியுங்கள் . ஒரே நிறுவனப்பங்கு உயர் PE மதிப்பில் வாங்கும் போது அது குறைச் செயலாக்கம் புரிகிறது . அதே நிறுவனப்பங்கு குறை PE மதிப்பில் நிறைச் செயலாக்கம் புரிகிறது .


கேள்வி : இன்றைய தேதிக்கு உங்கள் பங்குத் தொகுப்பை முழுவதும் விற்று கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் வருமானம் இரட்டிப்பாகி விடும் அல்லவா ?

பதில் : உண்மை தான் . வருமானம் இரட்டிப்பாகி விடும் . ஆனால் முதலீட்டுப் பெருக்கம் ?


கேள்வி : அதென்ன look through earnings ?

பதில் : நிறுவனம் ஒன்றின் ஒரு பங்குச் சம்பாத்தியம் 20 ரூபாய் என்று கொள்ளலாம் . நிறுவனத்தின் 100 பங்குகள் உங்களிடம் இருப்பதாகவும் கொள்ளலாம் . எனில் உங்கள் look through earnings 2000 ரூபாய் . Look through earnings ஐ நீங்கள் வெறுமனே பார்க்க மட்டுமே முடியும் . எனவே தான் அதற்கு அவ்வாறு பெயர் வந்தது . இந்தப் பார்க்கக்கூடிய வருமானத்தின் ஒரு பகுதியை நிறுவனங்கள் பங்காதாயமாக வழங்கும் . இந்த வருமானத்தின் மடங்குகளில் பங்குகள் வர்த்தகமாகும் . இந்த look through earnings தான் நிறுவனம் வளர உதவும் எரிபொருள் . பங்குகளில் முதலீடு செய்யும் போது இந்த look through earnings ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும் . இது வாரன் பஃபெட்டின் கருத்தாக்கமாகும் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14