கணிதம் உங்களை எவ்விதம் காப்பாற்றும் ?

கணிதம் உங்களை எவ்விதம் காப்பாற்றும் ?

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய algebra என்று அழைக்கப்படும் சாதாரண இயற்கணிதம் மட்டும் தெரிந்திருந்தால் சிறப்பு . சிக்கலான டெரிவேடிவ் கணக்குகள் தெரியாமல் இருப்பது இன்னும் சிறப்பு .

நிறையப் பேர் பங்குச்சந்தை குறித்துப் பாராமுகமாக இருப்பதற்கான அடிப்படையான காரணம் கூட்டுப் பெருக்கம் குறித்த சரியான புரிதல் இல்லாமையே என்பதாகத் தோன்றுகிறது . 0.1 சதவீத CAGR வேறுபாடு கூட ஆண்டாண்டுகளின் கணக்கில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது .

அதே மாதிரி பணவீக்கம் குறித்த புரிதல் . முதலீட்டில் பணவீக்கத்தைக் கழித்த கணக்கீடுகள் மிகவும் அடிப்படையானவை . அதற்கான சமன்பாடு : உண்மையான வருமானம் = வருமானம் - பணவீக்கம் . வருமானம் 7 சதவீதம் . பணவீக்கம் 7 சதவீதம் . எனில் உண்மையான வருமானம் பூஜ்யம் . உங்கள் முதலீடுகள் உண்மையான வருமானம் ஈட்ட பணவீக்கத்தை வெல்வதாக அவை இருக்கவேண்டும் . வெறுமனே வென்றால் மட்டும் போதாது . பணவீக்கத்தின் மடங்குகளில் வெல்ல வேண்டும் . அதற்குப் பங்குச்சந்தை முதலீடுகள் தான் ஒரே வழி .

சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு என்பதாகத் தொலைக்காட்சியில் breaking news போடுவார்கள் . இந்த இடத்தில் தான் சதவீதக் கணக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது . 1000 புள்ளிகள் என்பது மொத்தப் புள்ளிகளில் எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் . சென்செக்ஸ் தற்போது 60000 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது . 60000 ல் 1000 புள்ளிகள் என்பது 1.66 சதவீதம் மட்டுமே . இதனை மிகப்பெரிய சரிவு என்று கூறவியலாது . அதே சமயம் சென்செக்ஸ் 6000 புள்ளிகள் இருக்கும் போது 1000 புள்ளிகள் சரிந்தால் அந்த 16.6 சதவீத சரிவு கவனம் கொள்ள வேண்டிய ஒன்றாகிறது .

தனிப்பட்ட பங்குகளின் விலையிலும் இந்த சதவீதக் கணக்குகள் முக்கியம் பெறுகின்றன . Page Industries பங்கு 49000 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . திடீரென்று ஒரு நாள் அதன் பங்கு 1470 ரூபாய் குறைகிறது . IRFC பங்கு 31 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது . ஒரு நாள் அதன் பங்கு 93 காசுகள் குறைகிறது . இந்த இரண்டும் 3 சதவீத சரிவு மட்டுமே . ஆனால் Page Industries சரிவு மிகுதியாக உணரப்படுகிறது . IRFC சரிவு அவ்வளவாக உணரப் படுவதில்லை . இந்தச் சரிவுகளை சரியாக உணர்வதற்கு சதவீதக் கணக்குகள் போட்டுப் பார்க்க வேண்டும் .

இந்த சதவீதக் கணக்குகளிலும் கவனமாக இருக்க வேண்டும் . சிலர் நிறுவனப் பங்கு ஒன்றை 10 ரூபாய்க்கு வாங்கி ஒரு மாதத்தில் 15 ரூபாய்க்கு விற்று , மாத வருமானம் 50 சதவீதம் , எனில் , ஆண்டு வருமானம் 600 சதவீதம் என்று கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள் . ஒரு மாத இடைவெளியில் இந்த மாதிரி 12 முறை தொடர்ச்சியாக வருமானம் ஈட்டுவதற்கான நிகழ்தகவு என்ன என்று சற்றே யோசித்துப் பாருங்கள் .

50 சதவீத இலாபமும் 50 சதவீத நஷ்டமும் ஒன்றல்ல . 50 சதவீத நஷ்டம் அடைந்து விட்டால் அதனை ஈடுகட்ட 100 சதவீதம் சம்பாதிக்க வேண்டும் . எனவே தான் சந்தையில் நஷ்டம் தவிர்த்தல் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது .

இப்போது எந்தப் பொருளிலும் அதன் விலையைக் குறித்து வைக்கும் போக்கு மறைந்து EMI ஐ குறித்து வைப்பதான ஒரு புதிய நடைமுறை வந்திருக்கிறது . இவ்வாறாக பொருட்களின் விலை மலிவு என்பதான ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது . அதே மாதிரி 0% வட்டி . பூஜ்ய வட்டி என்பதாக எதுவும் கிடையாது . இலவச சேவை செய்வதற்காக யாரும் எந்தத் தொழிலும் செய்ய மாட்டார்கள் . இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக எதையாவது வாங்கினால் அங்கு விற்கப்படும் பொருளே நீங்களாகத் தான் இருப்பீர்கள் . எதைக் கடனில் வாங்க வேண்டும் என்பதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது . Never borrow to buy something that will last less time than the debt . கடன் பெற்று எதையாவது வாங்கினால் நீங்கள் வாங்கும் பொருள் கடன் செலுத்தும் காலத்தை விட நீண்ட நாட்கள் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும் . அழியாத செல்வம் கல்வி . இந்த அழியாத செல்வத்தை அடையக் கடன் வாங்கலாம் . அதே மாதிரி வீட்டுக்கடன் ...

சிலர் மில்லியன் மற்றும் பில்லியன் போன்ற எண்களை இடம் மாற்றி போகிற போக்கில் எழுதவும் எண்ணவும் செய்து கொண்டிருப்பார்கள் . மில்லியனுக்கும் பில்லியனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் உள்ளது . மில்லியன் என்பது பத்து இலட்சம் . கோடிகளில் சொல்வதானால் 0.1 கோடி . பில்லியன் என்பது 100 கோடி . வேறு மாதிரி சொல்வதானால் ஒரு வினாடிக்கு ஒரு எண் என்பதாக உச்சரித்தால் மில்லியன் வினாடிகளுக்கு 11.5 தினங்கள் ஆகும் . அதுவே பில்லியன் வினாடிகள் என்றால் அதனை உச்சரிக்க 32 வருடங்கள் ஆகும் .

சராசரிகளிலும் கவனமாக இருக்க வேண்டும் . அது வெறுமனே பத்து எண்களைக் கூட்டி பத்தால் வகுப்பது மட்டுமல்ல . இந்த பத்து எண்களுக்கும் இடையில் இணக்கம் (relavance) இருக்க வேண்டும் . ஒரு அறையில் பத்து நபர்கள் இருப்பதாகக் கொள்ளலாம் . அவர்களின்  வருமான சராசரியைக் கணக்கிட இந்தப் பத்து நபர்களின் வருமானத்தைக் கூட்டி பத்தால் வகுத்தால் போதுமானது . அந்தப் பத்து நபர்களில் ஒருவர் வாரன் பஃபெட் என்று கொண்டால் கணக்கு மாறி விடும் .

பங்குகளைப் பொறுத்தவரை அவற்றின் விலை என்பது வேறு . மதிப்பு என்பது வேறு . கரடிச்சந்தையில் பங்குகளின் விலை குறைந்து அதன் விளைவாக மதிப்பு கூடுகிறது . காளைச்சந்தையில் பங்குகளின் விலை கூடி அதன் விளைவாக மதிப்பு குறைகிறது . பெரும்பாலான சமயங்களில் விலையும் மதிப்பும் ஒன்று கூடுவதில்லை . இந்த விலையும் மதிப்பும் எப்போதும் ஒன்று என்ற தவறான கருத்தாக்கத்தில் தான் efficient market hypothesis கட்டப்பட்டுள்ளது .

பரஸ்பர நிதி விளம்பரங்களில் குறிப்பிடப்படும் 20 சதவீத CAGR என்பது அந்த நிதிகளை அதன் புது நிதி வெளியீட்டின் (New Fund Offer) போது வாங்கி நாளது தேதி வரை வளர்ச்சி விருப்பத் தேர்வில் (Growth Option) வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் . அந்த நிதிகளை இடையில் வாங்கி இடையில் விற்று வெளியேறியவர்களுக்கான CAGR சமயங்களில் எதிர்மறையாகக் கூட இருக்கும் .

நேரடியாகப் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கும் தாக்கச் செலவு மற்றும் வரி முதலான உராய்வுச் செலவுகளைக் கழித்த கணக்கீடுகள் தான் உண்மையான ஒன்றாக இருக்கும் .

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் வாய்ப்பு விலை (Opportunity Cost) கணக்கிட்டுப் பாருங்கள் . வாரன் பஃபெட் பத்து இலட்சம் பெறுமான முடி வெட்டுதல் என்ற கருத்தின் மூலமாக இதைத் தான் கூறுகிறார் . சாதாரணமான செலவான முடிவெட்டுதலுக்கு மாதம் 100 ரூபாய் செலவழிக்கலாம் . அல்லது 200 ரூபாய் செலவழிக்கலாம் . இரண்டுக்கும்  இடையிலான வித்தியாசம் வெறும் 100 ரூபாய் மட்டும் தான் . சரியா ? தவறு ! மாதம் 100 ரூபாய் என்றால் வருடத்திற்கு 1200 ரூபாய் . ஆண்டாண்டு இந்த 1200 ரூபாயை பன்மடங்காளர் பங்கு ஒன்றை இனங்கண்டு முதலீடு செய்திருந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கப் பெற்றிருக்கும் ? இது தான் வாய்ப்பு விலை . அதற்காக முடி வெட்டக்கூடாது என்று வாரன் சொல்ல வரவில்லை . எந்தச் செலவையும் தன் உணர்வுடன் (conscious) செய்ய வலியுறுத்துகிறார் .

அடிப்படை நிதி விகிதங்கள் ( Financial ratios ) மற்றும் இந்த நிதி விகிதங்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த புரிதல் அடிப்படையான ஒரு தேவை . உதாரணமாக பங்கின் விலை மற்றும் பங்கு ஈட்டு விகிதம் இவையிரண்டுக்கும் இடையிலான எதிரெதிர் தொடர்பு ... பங்கின் விலை மற்றும் மதிப்பு இவையிரண்டுக்கும் இடையிலான எதிரெதிர் தொடர்பு ... கடன் , நிறுவனத்தின் இலாபத்தை எதிர்மறையாக எவ்விதம் பாதிக்கிறது ... நிகர இலாப வரம்புக்கும் turnover க்கும் உள்ள நேர்மத் தொடர்பு ...

நிகழ்தகவு குறித்த கதை ஒன்றுடன் இந்தப் பதிவை முடிக்கலாம் . நண்பர்கள் நான்கு பேர் அதிகாலை நேரத்தில் தேநீர் அருந்திய வண்ணம் சுற்றுலா விடுதி ஒன்றில் உட்கார்ந்தபடி உரையாடிக் கொண்டிருந்தனர் . பேச்சு அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் கணிதத்தில் வந்து முடிந்தது . ஒருவர் கணிதப் பாடத்தில் நிகழ்தகவு குறித்த கணக்குகள் அவருக்குக் கடினமாக இருந்ததாகத் தெரிவித்துக் கொண்டார் . மற்றொருவர் கணக்கில் புலி . அவர் நிகழ்தகவு குறித்து ஒரு சிறிய விளக்கம் கொடுத்தார் . நண்பர்களே ! பனி பெய்யும் இந்த அதிகாலை நேரத்தில் , தெருவில் அரிதாக எப்போதேனும் நடந்து செல்லும் ஒன்றிரண்டு பேர்களை ஜன்னல் வழியாக நாம் பார்க்க முடிகிறது . அடுத்த ஐந்து நிமிடங்களில் இந்த ஜன்னலைக் கடந்து செல்வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்யம் அல்லது மிஞ்சிப் போனால் ஒன்றிரண்டு என்று சொல்லலாம் . இது தான் நிகழ்தகவு . அதாவது ஒரு நிகழ்வு நடப்பதற்குரிய தகவு . நண்பர்களில் ஒருவர் பந்தயம் கட்டுவதில் புலி . அவர் கூறியதாவது : அடுத்த ஐந்து நிமிடங்களில் இந்த ஜன்னலை 100 பேர் கடந்து செல்வார்கள் என்று 1000 ரூபாய் பந்தயம் கட்டுகிறேன் . நண்பர்கள் ஒரு சேர உங்களுக்குப் பித்துப் பிடித்து விட்டதா ? 100 பேர் ? அதுவும் இந்த அதிகாலைப் பனியில் ? பந்தயம் கட்டுபவர் உறுதியாக இருந்தார் . மூன்று நண்பர்களும் தலா 1000 ரூபாய் பந்தயம் கட்டினர் . சற்று நேரத்தில் இராணுவ வீரர்களின் அணிவகுப்பு ஒன்று அவர்களைக் கடந்து சென்றது .

நான்கு நண்பர்களில் ஒருவர் காற்றில் தவழ்ந்து வந்த இராணுவ அணிவகுப்பு இசையைக் கூர்ந்து கேட்டு பந்தயம் கட்டி வெற்றி பெற்றதில் அவர் கூர்மதி வெளிப்படுகிறது . மனிதத்தின் கூர்மதி என்று அழைக்கப்படும் பங்குச்சந்தையிலும் மதிப்புப் பாங்கோசையை இனங்கண்டு முதலீடு செய்யுங்கள் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14