மெய்நிகர் பணம் - 2
மெய்நிகர் பணம் - 2
Virtual Money - 2
உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இவ்வளவு கூடியிருக்கிறது . அதே சமயம் ஏழைகள் மிகவும் ஏழைகளாகி விட்டார்கள் . இந்தப் பணக்காரர்களின் சொத்தை வைத்து இந்தியாவின் வெளி நாட்டுக் கடனை அடைத்து விடலாம் , இவர்களது சொத்தைப் பிரித்து ஏழைகளுக்குத் தலா இவ்வளவு கொடுக்கலாம் என்று தினசரிகளில் அவ்வப்போது செய்திகள் வெளியாவதை நீங்கள் படித்திருக்கலாம் . இது எவ்வளவு தூரம் சாத்தியம் ? வாருங்கள் , பார்க்கலாம் .
முதலாவதும் முக்கியமானதுமான ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இது ரொக்கப் பணம் (Hard money) அல்ல , மாயப் பணம் (Virtual money) அம்பானியின் சொத்து மதிப்பு ஏழு இலட்சம் கோடி என்றால் அத்தனை பணத்தையும் அவர் தன் வீட்டு அலமாரியில் வைத்துப் பூட்டியிருக்கவில்லை . அம்பானியின் சொத்து மதிப்பு ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் விலையுடன் கட்டப்பட்டுள்ளது . ரிலையன்ஸ் பங்குகளின் விலை நிறுவனத்தின் இலாப நஷ்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது . குறுகிய கால அளவில் இந்தத் தொடர்பு அவ்வளவு துலாம்பரமாகத் தெரியாவிட்டாலும் நீண்ட கால அளவில் இந்த அடித்தொடர்தல் மிகவும் அடிப்படையான ஒன்றாகும் . நிறுவனம் தொடர்ந்து இலாபத்தின் மேல் இலாபம் ஈட்டும் வரை பங்கின் விலைகள் கூடிய வண்ணமாக இருக்கும் . பங்குகளின் இந்த விலையேற்றத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன . ஒன்று ஒரு பங்குச் சம்பாத்தியம் என்று சொல்லப்படும் Earnings Per Share சுருக்கமாக EPS . மற்றொன்று இந்த ஒரு பங்குச் சம்பாத்தியத்தைத் தொடரும் விலை வருவாய் விகிதம் என்று சொல்லப்படும் Price Earning Multiple சுருக்கமாக PE . இந்த EPS ஐயும் PE ஐயும் பெருக்கினால் கிடைப்பது தான் பங்கின் விலை . அம்பானி எத்தனை ரிலையன்ஸ் பங்குகளை வைத்திருக்கிறாரோ அதனை ரிலையன்ஸ் பங்கு ஒன்றின் விலையுடன் பெருக்கி வரப்பெறும் மதிப்பு தான் அம்பானியின் சொத்து மதிப்பு . இந்த சொத்து மதிப்பு பங்குச்சந்தை செயல்படும் ஒவ்வொரு வினாடியும் மாறக்கூடிய தன்மை படைத்தது . காளைச்சந்தையாக இருந்தால் PE விரிவாக்கம் பெற்று அம்பானியின் சொத்து மதிப்பு கூடும் . கரடிச்சந்தையாக இருந்தால் PE குறுக்கம் அடைந்து அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்து விடும் . ஒரு பேச்சுக்கு அம்பானி இந்த சொத்து முழுவதையும் அதாவது தனது நிறுவனப் பங்குகள் அனைத்தையும் விற்று ஏழை எளிய மக்களுக்குப் பிரித்துக் கொடுக்க முடிவெடுத்து விட்டதாகக் கொள்ளலாம் . அவ்வளவு பங்குகளையும் வாங்குவதற்கான அத்தனை இலட்சம் கோடி யாரிடமும் கிடையாது . அதை விட முக்கியமாக அம்பானி இவ்விதம் முடிவெடுத்து விட்டதான செய்தி வெளி வந்த அடுத்த கணத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் சரிவடைந்து அதன் மதிப்பு பூஜ்யமாகி விடும் . ஆக , நிறுவனம் தொடர்ந்து இலாபகரமாக இலாபமீட்டும் வரை மட்டுமே அதன் மதிப்பைத் தக்க வைக்க முடியும் .
மேலும் இந்த விலை வருவாய் விகிதம் என்று அழைக்கப்படும் PE , நிறுவனம் ஈட்டும் இலாபத்தை மட்டும் கணக்கில் கொள்ளாது நிறுவனம் எந்த வகையில் இலாபம் ஈட்டுகிறது என்பதையும் கவனத்தில் கொள்வதாக இருக்கும் . நிறுவனம் அற வழியில் இலாபம் ஈட்டுகிறதா ? நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் திறந்த புத்தகமாக உள்ளதா ? நிறுவனத்தின் கடன் எவ்வளவு ? நிறுவனர்கள் நிறுவனப் பங்கை அடமானம் வைத்திருக்கிறார்களா ? நிறுவனம் தனது இலாபத்தை அவ்வப்போது முதலீட்டாளர்களுடன் பங்காதாயம் மற்றும் இலவசப்பங்கு வெளியீடுகள் மூலமாகப் பகிர்ந்து கொள்கிறதா என்ற தரவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . ஒரு நிறுவனம் மேற்சொன்ன வழியில் செயல்பட்டால் சந்தை அந்த நிறுவனத்திற்குக் கூடுதல் மதிப்பிலான விலை வருவாய் விகிதத்தை வழங்கும் . நிறுவனம் இதற்கு மாறாகச் செயல்பட்டால் சந்தை அதனைத் தண்டிக்கவும் தயங்காது . தண்டனை என்றால் FIR போட்டு கொஞ்ச நாட்கள் கம்பி எண்ண வைத்து பின்னர் பிணையில் வெளியே வந்து வழக்கு வாய்தா என்றெல்லாம் வருடக்கணக்கில் நீடிக்காது . ஒரே நாளில் , நாள் எல்லாம் அதிகம் , நிமிடங்களில் PE குறுக்கம் அடைந்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு காற்றில் வைத்த கற்பூரம் கணக்காகக் கரைந்து விடும் . சந்தை நம்பிக்கையின் மேல் நிற்கிறது . நம்பிக்கை போனால் எல்லாமே போனதாக அர்த்தம் . சத்யம் கம்ப்யூட்டர் கற்பனைக் கணக்கு பிரச்னை வெடித்த போது நிமிடங்களில் அதன் சந்தை மதிப்பு தரையைத் தட்டியது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது .
பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைப் பணிகளுக்காக அவரது நிறுவனப் பங்குகளை சந்தை தாங்கும் அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுக் கொண்டிருக்கிறார் . பங்குகள் , சந்தையில் மதிப்பு முதலீடாக குறை PE மதிப்பில் வர்த்தகமாகும் போது பங்குகளைத் திரும்ப வாங்குதலும் (Buyback) ஒரு பக்கம் நடந்த வண்ணம் உள்ளது . இன்னொரு பக்கம் அவரது நிறுவனமும் தொடர்ந்த வாக்கில் இலாபகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் . இவையனைத்தையும் சமன் செய்வது என்பது கம்பி மேல் நடப்பது மாதிரி கவனமாகச் செய்ய வேண்டிய காரியம் . மற்றபடி நமது அப்பன் பாட்டன் முப்பாட்டன் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பது மாதிரி இது இலகுவான காரியமல்ல .
விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி தனது நிறுவனத்தின் 67 சதவீதப் பங்குகளை அவரது அறக்கட்டளைப் பணிகளுக்காக எழுதி வைத்திருக்கிறார் . இந்த 67 சதவீதப் பங்குகள் வழங்கும் பங்காதாயப் பணத்தில் அறக்கட்டளை தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் இடக்கூடாது என்ற அடிப்படையில் பிரேம்ஜி இந்தப் பங்காதாயப் பணத்தை பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் மூலமாகப் பங்குச்சந்தையில் இன்னமும் பட்டியலிடப்படாத மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்த வண்ணம் இருக்கிறார் . மேலும் விப்ரோ நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்ட விப்ரோ கன்ஸ்யூமர் கேர் நிறுவனம் இன்னமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை . ஒருவேளை இனி வரும் காலங்களில் அது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால் மதிப்புத் திறப்பு (value unlocking) என்ற வாக்கில் பெரும் பணம் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது . இவ்வாறாக அசீம் பிரேம்ஜி , அவரது அறக்கட்டளைக்கு ஒரு நிலைத்தன்மை (sustainability) யையும் அதிலிருந்து பணப்பாய்ச்சல் (cash flow) ஒன்றையும் ஒரே சமயத்தில் உருவாக்கிக் கொண்டதைக் கவனியுங்கள் . இவை எல்லாமே நிற்பது விப்ரோ நிறுவனத்தின் தொடர்ந்த செயல்பாட்டில் உள்ளது . விப்ரோ நிறுவனத்தின் 74 சதவீதப் பங்குகள் அசீம் பிரேம்ஜி கைவசம் உள்ளன . அரசாங்க விதிமுறையின் பொருட்டு தனது நிறுவனப் பங்குகளை விற்றதைத் தவிர்த்து விப்ரோ நிறுவனத்தின் ஒரு பங்கைக் கூட அசீம் பிரேம்ஜி இதுவரை விற்கவில்லை என்பது முக்கியமான ஒரு தகவல் . வாங்கிய பங்கு இரட்டிப்பாவதற்கு முன்னரே இலாபத்தைப் பிடிக்க முனையும் சிறு முதலீட்டாளர்கள் இதனை மிகவும் முக்கியமாகக் கவனிக்கவும் . அறக்கட்டளை நடத்துவது குறித்து பிரேம்ஜியின் கருத்து : கல்வி சார்ந்த அறக்கட்டளைச் செயல்பாடுகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறதா என்பதை அளவிடுவது இயலாத ஒன்றாக இருக்கிறது , நிறுவனம் ஒன்றைக் கூட நடத்தி விடலாம் , அறக்கட்டளையை முறையாக நடத்துவது அதனினும் கடினமாக இருக்கிறது .
சிறு முதலீட்டாளராக இருப்பதில் ஒரு கேந்திரமான அனுகூலம் உள்ளது . நமது பங்குத் தொகுப்பில் உள்ள ரிலையன்ஸ் பங்குகளை சுட்டியின் ஒரு சொடுக்கில் விற்று விட்டு வெளியேறி விடலாம் . அம்பானியால் அவ்விதம் செய்ய முடியாது .
வாரன் பஃபெட் தனது இளமைக் காலத்தில் தர்ம காரியங்களுக்காக நிறையச் செலவிட்டதில்லை . ஊரே அவரைக் கஞ்சன் என்பதாக வசை பாடியது . ஆனால் வாரனுக்குக் கூட்டுப் பெருக்கத்தின் மகோன்னதம் தெரியும் . அவரின் பின்னாட்களில் கொடுத்த தொகை மாதிரி ஆரம்ப நாட்களில் அவரால் நிச்சயம் கொடுத்திருக்க முடியாது. வாரனின் தற்போதைய சொத்து மதிப்பு 10020 கோடி டாலர் . இந்திய ரூபாய் மதிப்பில் 801280 கோடி . இதன் 99 சதவீதத்தை வாரன் அவரது நண்பரான பில்கேட்ஸின் அறக்கட்டளைக்கு எழுதி வைத்து விட்டார் .
முன்பே குறிப்பிட்டது மாதிரி சிறு முதலீட்டாளர்கள் அவர்களது மொத்தப் பங்குத் தொகுப்பையும் விற்றுப் பணமாக்கம் செய்து கொள்ளலாம் . ஆனால் எப்படி சிறுகச் சிறுக ஒரு பங்குத் தொகுப்பைக் கட்டுகிறோமோ அது மாதிரி அந்தப் பங்குத் தொகுப்பிலிருந்து பணத்தை எடுக்கவும் சில விதிமுறைகள் உள்ளன . நீண்ட கால அடிப்படையில் மதிப்பு முதலீடாக நீங்கள் உங்கள் பங்குத் தொகுப்பைக் கட்டியிருக்கும் பட்சத்தில் அதிலிருந்து பங்காதாயம் மூலமாக ஒரு பணவரவு கட்டாயம் இருக்கும் . உங்கள் பங்குத் தொகுப்பிலிருந்து இந்தப் பங்காதாயத்தையும் சேர்த்து வருடத்திற்கு 4 சதவீதம் எடுத்துக் கொள்ளலாம் . பங்காதாயம் மூலமாகவே உங்களுக்கு இந்த 4 சதவீதம் கிடைக்கப் பெற்றால் இன்னும் உத்தமம் . உங்கள் பங்குத் தொகுப்பை விற்க வேண்டும் என்ற அவசியமே எழாது . அவ்வப்போது களையெடுத்தால் மட்டும் போதுமானது . இவ்வாறாக அசீம் பிரேம்ஜி மாதிரி உங்கள் பங்குத் தொகுப்பிற்கு ஒரு நிலைத்தன்மையையும் அதே சமயத்தில் அதிலிருந்து பணப்பாய்ச்சல் ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளலாம் . இந்தப் பங்குத் தொகுப்பை உங்கள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதன் மூலமாக அதற்கு ஒரு அழியாத் தன்மையைக் கொடுக்கலாம் .
நிறுவனப் பங்குகள் பொன் முட்டையிடும் வாத்தைப் போன்றவை . பொன் முட்டையைக் கைப்பற்றுவதற்காக வாத்தை அறுத்து விடக்கூடாது .
Comments
Post a Comment