தலைகீழ் விகிதங்கள் - 2

தலைகீழ் விகிதங்கள் - 2

Investing for the long run works only as long as people don't believe it  - Peter Bernstein

நீண்ட காலத்திற்கான முதலீடுகள் , அதில் மக்கள் நம்பிக்கை கொள்ளாத வரை மட்டுமே செயல்படுவதாக இருக்கும் . Peter Bernstein ன் இந்தப் பங்குமொழி மூலமாக என்ன சொல்ல வருகிறார் என்று கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம் .

ஒரு பேச்சுக்கு எல்லா முதலீட்டாளர்களும் நீண்ட கால நோக்கைக் கைக்கொள்வதாகக் கற்பிதம் செய்து கொள்ளலாம் . இது ஒருபோதும் சாத்தியமில்லை என்றாலும் கற்பனைக்குதிரையை அவிழ்த்து விடுவோம் .

நிறுவன முதலீட்டாளர்கள் உட்பட எல்லோரும் நிறுவனப் பங்குகளை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து மதிப்பு முதலீடாக வாங்கி பங்காதாயம் மூலமாக மட்டும் பலன் பெறுவதாக ஒரு சந்தை இயங்குகிறது . முதலில் அடி வாங்குவது நீர்மை நிறைத்தன்மை (Liquidity) முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமாக இருந்தால் மட்டுமே நிறைய எண்ணிக்கையிலான பங்குகள் வர்த்தகமாகும் . இந்த நிறை எண்ணிக்கையில் தான் தாக்கச்செலவு (impact cost) மட்டுப்படும் . பங்குகளை வாங்கும் போது கூடுதல் விலை கொடுத்து வாங்குவது மற்றும் விற்கும் போது குறை விலையில் விற்பது தாக்கச் செலவு என்று அழைக்கப்படுகிறது . தாக்கச் செலவைக் குறைவாக மதிப்பிட்டு விடவேண்டாம் . பங்குச்சந்தையின் மிக முக்கியமான ஒரு அனுகூலமே இந்த நீர்மை நிறையின் மூலமாகத் தாக்கச் செலவு மிகவும் குறைந்து பங்குகளை அவை வர்த்தகமாகும் விலையை ஒட்டி வாங்க முடிவதும் விற்க முடிவதும் தான் . இந்த நீர்மை நிறைத்தன்மை குறைவாக இருந்தால் என்னவாகும் என்பதை ஒரு சின்ன உதாரணம் மூலமாகப் பார்க்கலாம் . திவால் நிலையிலிருந்த Ruchi Soya Industries நிறுவனத்தை Patanjali நிறுவனம் விலைக்கு வாங்கியது . அப்போது ருசி சோயா நிறுவனப்பங்கின் விலை 17 ரூபாய் . அடுத்த ஐந்து மாதங்களில் அதன் பங்கு 1535 ரூபாய் என்ற அளவை எட்டியது . திவால் நிலை ருசி சோயா நிறுவனத்தை பதஞ்சலி வாங்கும் போது ருசி சோயா நிறுவனத்தின் மொத்தப் பங்குகள் 29.58 கோடி . அதில் நிறுவனர்கள் பங்கு 29.29 கோடி . மீதி 0.29 கோடி பங்குகள் மட்டும் அதாவது நிறுவனத்தின் ஒரு சதவீதம் மட்டும் பொதுமக்கள் வசம் இருந்தது . செபி விதிகளின் படி மூன்று வருடத்திற்குள் 25 சதவீதப்பங்கு பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் . முன்னரே குறிப்பிட்டபடி  நிறுவனத்தின் ஒரு சதவீதப் பங்குகள் மட்டுமே பொதுமக்கள் வசம் இருந்தது . இந்த ஒரு சதவீதத்திலும் floating stock எனப்படும் சந்தையில் அன்றாடம் விற்பனைக்கு வரும் பங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் . பட்டியலிடப்படாத பதஞ்சலி நிறுவனம் , பட்டியலிடப்பட்ட ருசி சோயா நிறுவனத்துடன் தலைகீழ் இணைப்பு ( reverse merger ) என்ற அடிப்படையில் இணைக்கப்படலாம் என்ற எண்ணத்தின் காரணமாக ( தற்போது இணைக்கப்பட்டு விட்டது ) ருசி சோயா நிறுவனத்தின் பங்குகளுக்கான தேவைப்பாடு மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகிறது . ஆனால் floating stock மீமிகைச் சுருக்கத்திற்கு உள்ளாகி விட்டது . நிறுவனப்பங்குகளுக்கான தேவையோ மிக அதிகம் . அளிப்போ மிகவும் குறைவு . விளைவாகப் பங்குகளின் விலை விண்ணை முட்டியது . இது அரிதினும் அரிதான ஒரு உதாரணம் . சந்தையில் பொதுவாக இந்த மாதிரி நடைபெறாது . நீர்மை நிறையின் முக்கியத்துவம் கருதி இதை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன் . ருசி சோயா நிறுவனம் ஏற்றத்திற்கு உள்ளானது மாதிரி சத்யம் கம்ப்யூட்டர் பங்கு இறக்கத்திற்கு உள்ளானது இன்னொரு உதாரணம் . அதன் கற்பனைக் கணக்கு விவகாரத்தின் போது நிறுவனப்பங்குகளின் அளிப்பு அதிகரித்து தேவை குறைந்தது .

பங்குச்சந்தையை ஒரே வரியில் விளக்க வேண்டுமென்றால் அது ஏறி இறங்கும் தன்மை கொண்டது என்று சொல்லலாம் . இந்த ஏற்ற இறக்கம் (volatility) தான் தினசரி மற்றும் குறுகிய கால வணிகத்திற்கு ஆதாரமானது . தினசரி மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்த ஏணியில் ஏறுவதும் (profit booking) இறக்கத்தில் சரிவதுமாக (short selling) பணம் ஈட்டுவார்கள் . நீண்ட கால மதிப்பு முதலீட்டாளர்கள் அவ்வப்போது இறங்கும் பங்குச்சந்தை இறக்கத்தை தங்கள் ஏற்றத்திற்கு ஏணியாகக் கொள்வார்கள் . எல்லோரும் நீண்ட காலப் பார்வையாளர்களாக மாறி விட்டால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இல்லாமல் போய் விடும் . சந்தை அதன் காரசாரத்தை இழந்து உப்பில்லாத கஞ்சியாகி விடும் .

மேலும் பங்குச்சந்தை தாரக மந்திரமாகிய buy low sell high என்பதற்கே இடமிராது . பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது தனிப்பட்ட முதலீட்டாளர்கள் மட்டுமல்ல , நிறுவனங்களும் தான் . நிறுவனங்கள் மீமிகை கரடிச் சந்தையில் தத்தமது நிறுவனப் பங்குகள் மதிப்பு முதலீடாக வர்த்தகமாகும் போது அத்தகைய பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுதல் , பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்குதல் என்று அழைக்கப்படுகிறது . மீமிகை காளைச் சந்தையில் தத்தமது நிறுவனப் பங்குகள் மிகை மதிப்பீட்டில் வர்த்தகமாகும் போது அத்தகைய பங்குகளைக் கொண்டு பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் அதிக விலைக்கு விற்றல் என்று அழைக்கப்படுகிறது .

மேலும் நிறுவனங்கள் மிகை மதிப்பீட்டுக் காலங்களில் தத்தம் நிறுவனப் பங்குகளைத் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு QIP (Qualified Institutional Placement) என்ற முறையில் விற்று , நிதியைத் திரட்டிக் கடனை அடைத்துக் கொள்ளும் செயல்களுக்கும் வழியிருக்காது .

இவ்வாறு எல்லா முதலீட்டாளர்களும் பெஞ்சமின் கிரகாம் ஆகத் தொடங்கி பிலிப் பிஷர் கணக்காக வாரன் பஃபெட் வழியில் மதிப்பு முதலீட்டை மேற்கொண்டால் கரடிச்சந்தையில் பங்குகளுக்கான தேவைப்பாடு (demand) அதிகரித்து கரடி காளையாக உருமாறி விடும் ! அதே மாதிரி காளைச் சந்தையில் பங்குகளின் அளிப்பு (supply) அதிகரித்து காளை கரடியாகி விடும் !

ஆனால் இது வெறும் பகல் கனவு மட்டும் தான் . இது நடைபெறும் என்பதற்கான சாத்தியக்கூறு முடியாது என்பதற்கு அடுத்தது (next to impossible) நீண்ட கால முதலீட்டாளர்கள் சிறுபான்மையாகவும் தின மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கும் போக்கு என்றென்றைக்கும் மாறப் போவதில்லை . எனவே நரியைப் பரியாக்கும் இந்தத் திருவிளையாடலும் ஒரு போதும் நடைபெறப் போவதில்லை .

இவ்வாறாக நீண்ட காலத்திற்கான முதலீடுகள் , அதில் மக்கள் நம்பிக்கை கொள்ளாத வரை மட்டுமே செயல்படுவதாக இருக்கும் . வேறு மாதிரி சொல்வதானால் , நீண்ட காலத்திற்கான மதிப்பு முதலீட்டு உத்திகளில் மக்கள் நம்பிக்கை கொள்ளாத வரை அதற்கு அழிவேயில்லை .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14