ஒரு கேள்வி ஒரு பதில் - 2
ஒரு கேள்வி ஒரு பதில் - 2
கேள்வி : உள்ளார்ந்த மதிப்பை (Intrinsic value) முதலீட்டிற்கு எப்படிப் பயன்படுத்துவது ? உள்ளார்ந்த மதிப்பைக் கணக்கீடு செய்த பின்னர் அந்த மதிப்பிற்குக் குறைவாகப் பங்குகள் வர்த்தகமாகும் போது அவற்றை வாங்கி அந்த மதிப்பிற்கு அதிகமாகப் பங்குகள் வர்த்தகமாகும் போது விற்று விடுவது சிறந்ததா ? அல்லது அத்தகைய பங்குகளை இனங்கண்டு வாங்கி அவற்றைக் காலா காலத்துக்கும் வைத்திருப்பது நல்லதா ?
பதில் : உள்ளார்ந்த மதிப்பு குறித்து ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் . உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு தனிப்பட்ட எண் அல்ல . Range of values என்ற அடிப்படையில் அது ஒரு மதிப்புப் பட்டையில் ( value band ) இருக்கும் . ஒரு நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பு ரூ.2127.32 என்று கணிப்பதெல்லாம் உட்டாலக்கடி .
உள்ளார்ந்த மதிப்பு , பங்குகளின் சந்தை மதிப்பைப் போல் தின அளவில் மாறாது என்றாலும் அதுவும் அவ்வப்போது மாறிய வண்ணமாகவே இருக்கும் . நிறுவனத்தின் ஒரு வியாபார உத்தி , அது மேற்கொள்ளும் விரிவாக்கம் , அதன் கையகம் , புதிய காப்புரிமைகள் போன்ற ஒவ்வொரு தரவுகளும் அதன் உள்ளார்ந்த மதிப்பை நேர்மமாகவோ அல்லது எதிர்மமாகவோ பாதிக்க வல்லவை . நிறுவனம் இலவசப் பங்களிப்பை மேற்கொள்ளலாம் . அதன் பங்குகளைப் பிரிக்கலாம் . ஏன் , நிறுவனத்தையே பிரித்து அதனைப் பட்டியலிடலாம் . ஒரு முறை சிறப்புப் பங்காதாயத்தை வழங்கலாம் . இத்தகைய தருணங்களில் உயர் விலைத் திறப்பு (Gap up opening ) என்ற அடிப்படையில் அதன் விலையும் மதிப்பும் உடனடியாக அடுத்த கட்டத்தை எட்டி விடும் . நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை முறையாக இனங்கண்டு அந்த மதிப்பிற்கும் குறைவாக அதன் பங்குகளை வாங்கிய பின்னர் அது தரமான நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் அத்தகைய நிறுவனங்களின் தொடர்ந்த வாக்கிலான மதிப்பு உருவாக்கத்தில் காலா காலத்துக்கும் பங்கு பெறுவது தான் அறிவார்ந்த ஒரு செயலாக இருக்க முடியும் .
நிறுவனம் தனது உள்ளார்ந்த மதிப்பைச் சிறுக்கும் செயல்களில் ஈடுபட்டால் அதன் மதிப்பு குறுகிச் செல்லும் . அப்போது Gap down opening என்ற வகையில் அதன் விலை வழுக்கு மரத்தில் சறுக்கிச் செல்வதாக இருக்கும் .
முன்னரே குறிப்பிட்டது மாதிரி நாளும் தனது மதிப்பைப் பெருக்கும் நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்வது முக்கியம் . இத்தகைய நிறுவனங்களைத் தொடர்ந்து வைத்திருப்பது அதனினும் முக்கியம் .
உள்ளார்ந்த மதிப்பிற்குக் குறைவாக நிறுவனப் பங்குகளை வாங்கி அந்த மதிப்பிற்கும் அதிகமாக விற்பதில் ஆகப் பெரிய அபாயங்கள் இருக்கின்றன . ஒரு நிறுவனத்தை இந்த மாதிரி இனங்கண்டு வாங்கி விட்டதாகக் கொள்ளலாம் . அது காளைச் சந்தையில் கட்டாயமாக உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகும் . இத்தகைய பங்குகளை விற்று மதிப்பைக் கைப்பற்றி விட்டோம் . அது மீண்டும் குறை மதிப்பீட்டில் வர்த்தகமாகும் போது அதனை நாம் கவனக்குறைவாக வாங்காமல் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் . மேலும் இந்த மாதிரி வாங்கி விற்றால் இத்தகைய நிறுவனங்களின் உள்ளார்ந்த மதிப்பு தொடர்ந்த வாக்கில் அதிகரித்து வரும் போது ஒவ்வொரு முறையும் அதனைக் கணக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது . சந்தை மிகவும் செயல் விரைவு (dynamic) கொண்டது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் . அந்த மதிப்பு வாய்ப்பின் ஜன்னல் சிறிய கால அளவில் மட்டுமே திறந்திருக்கும் . மேலும் இந்த வாங்குவது மற்றும் விற்பதற்கான உராய்வுச் செலவுகள் என்ன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் . பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் புதிய நிறுவனங்களின் மதிப்புப் பாய்ச்சலையும் இனங்காண வேண்டும் . ஒரு சில நிறுவனங்களையே தொடர்ந்த வாக்கில் கணக்கீடு செய்து கொண்டிருந்தால் புதிய வாய்ப்புகளைக் கோட்டை விட்டு விடுவோம் . அதனினும் முக்கியமாக இவ்விதம் வாங்கி விற்றுக் கொண்டிருந்தால் பன்மடங்காளர் (multibagger) பங்குகளை எவ்விதம் கைக்கொள்வது ? 100 Baggers என்பதாக அழைக்கப்படும் 100 மடங்காளர் பங்குகளை அடைய அவை 100 மடங்கு ஆகும் வரை காத்திருத்தல் மிகவும் அடிப்படையான ஒன்றாகும் .
வாரன் பஃபெட் முதலீடுகளை வியாபாரம் மாதிரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் . வியாபாரம் என்றால் பங்குகளை வாங்கி விற்கும் வியாபாரம் அல்ல . பஃபெட் , நிறுவனர் மனப்பான்மை (ownership mentality) என்ற கருத்தாக்கத்தைக் குறிப்பிடுகிறார் . நிறுவனத்தில் ஒரு சில பங்குகளை வைத்திருக்கும் சிறு முதலீட்டாளராக இருந்தாலும் நீங்கள் பகுதி முதலாளி என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் . முகேஷ் அம்பானி , ரிலையன்ஸ் பங்குகள் அவற்றின் உள்ளார்ந்த மதிப்புக்கும் மேலாக வர்த்தகமாகிறது என்று விற்று விடுவாரா என்ன ? அப்படி விற்றால் அதனை வாங்கக்கூடிய அளவிற்கு அவ்வளவு பணம் யாரிடமும் இல்லை , மேலும் அந்த விற்பனையே ரிலையன்ஸ் பங்குகளை அவற்றின் உள்ளார்ந்த மதிப்புக்கும் கீழாகக் கொண்டு சென்று விடும் என்பது வேறு கதை . எப்போதாவது அரிதான சில சந்தர்ப்பங்களில் QIP என்ற முறையில் நிறுவனங்கள் தேவைப்படும் பணத்தைத் திரட்டுமே அன்றி இதனைத் தின அளவில் செய்யாது . உள்ளார்ந்த மதிப்புக்கும் கீழாக வர்த்தகமாகும் போது நிறுவனங்கள் buyback என்று சொல்லப்படும் தனது பங்குகளைத் தானே வாங்கும் செயல்களில் ஈடுபடும் . இவ்வாறாக அவ்வப்போது தனது பங்குகளைக் குறை மதிப்பீட்டில் வாங்கும் நிறுவனங்களை நாம் நீண்ட கால அளவில் வைத்திருக்கும் போது நிறுவனத்தில் நமது பங்கு நாம் தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ளாமலேயே கூடிய வண்ணமாக இருக்கும் .
ஒரு நிறுவனம் தொடர்ந்த வாக்கில் இலவசப்பங்குகளை வழங்கும் போது நீங்கள் பெறும் முதல் ஒன்றுக்கு ஒன்று என்ற இலவசப் பங்களிப்பும் ஐந்தாவது ஒன்றுக்கு ஒன்று என்ற இலவசப் பங்களிப்பும் ஒன்றல்ல என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம் . இந்த இலவசப் பங்குகளும் பங்காதாயத்தை வழங்கும் போது பங்காதாயம் மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகும் . ஒரு கட்டத்தில் ஒரு பங்கிலிருந்து நீங்கள் பெறும் வருட பங்காதாயம் நீங்கள் முதன் முதலாக வாங்கிய ஒரு பங்கின் விலையை விடக் கூடி விடும் .
உள்ளார்ந்த மதிப்பு கூடிச் செல்வது தின அடிப்படையில் நிகழாது . நீண்ட கால அளவில் தான் அது நிகழ்வதாக இருக்கும் . அது வரை பொறுமை காப்பது அவசியம் . மேலும் காளைச் சந்தையில் இந்த உள்ளார்ந்த மதிப்பு மிகைப் பெருக்கத்திற்கு உள்ளாவதும் மற்றும் கரடிச் சந்தையில் குறுக்கம் அடைவதும் மிக இயல்பான ஒன்று . இந்தக் குறுகிய கால அளவில் உயர்ந்து வரும் மதிப்புப் பாய்ச்சலைக் கைப்பற்ற முயல்வதும் குறைந்து வரும் அதனைக் காப்பாற்ற முயல்வதும் முதலுக்கே மோசத்தை விளைவித்து விடும் . கூட்டுப் பெருக்கத்தின் முதல் விதி அதனைத் தேவையின்றி இடர்ப்பாடுகளுக்கு உள்ளாக்கக் கூடாது என்பதாகும் . வளரும் நிறுவனத்துடன் நாமும் வளர்ந்து வருவது தான் தர்க்க ரீதியான ( logical ) ஒரு செயலாக இருக்க முடியும் .
பெஞ்சமின் கிரகாம் தவிர்த்த வாரன் பஃபெட்டின் மற்றொரு குருவான பிலிப் பிஃஷரின் ஒரு வாசகத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம் .
If the job has been correctly done when a
Common stock is purchased , the time to sell is - almost never .
பங்குகளை வாங்கும் போது அந்த வேலையைச் செவ்வனே செய்து விட்டால் அவைகளை விற்பது என்ற விவாதத்திற்கே இடமில்லை .
Comments
Post a Comment