பங்குச்சந்தை குறியீடுகளை வெற்றி கொள்வது எப்படி ?

பங்குச்சந்தை குறியீடுகளை வெற்றி கொள்வது எப்படி ?

ஆசிரியர் மாணவர்களுக்குக் கட்டுரைப்பாடம் ஒன்றைப் பரிந்துரைத்தார் . இந்த வகுப்பில் எந்த சக மாணவனை உங்களுக்குப் போட்டியாக நினைக்கிறீர்கள் ? அவனைத் தோற்கடிக்க என்ன உபாயத்தைக் கைக்கொள்ள நினைக்கிறீர்கள் ? ஒவ்வொரு மாணவனும் சக மாணவன் ஒருவனைத் தங்களுக்குப் போட்டியாக நினைப்பதாகவும் அவனைத் தேர்வில் வெல்வதற்கான உபாயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக எழுதியிருந்தனர் . ஒரு மாணவனின் பதில் ஆசிரியரின் கருத்தைக் கவர்ந்தது . நான் யாருடனும் போட்டியிடப் போவதில்லை . எனக்கு நானே தான் போட்டி . நடப்புத் தேர்வில் நான் 80 மதிப்பெண் பெற்றால் அடுத்த தேர்வில் குறைந்த பட்சம் 81 மதிப்பெண் பெற வேண்டும் . பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கு மேலாக தினமும் 50 பக்கங்கள் படிக்கிறேன் . அதனை 100 பக்கங்கள் ஆக்க வேண்டும் மற்றும் தூங்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும் ...

Mindset புத்தகத்தில்
Carol S Dweck  பின்வருமாறு குறிப்பிடுகிறார் .
வழக்கறிஞர் ஒருவர் வங்கி ஒன்று தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றியது சம்பந்தமான வழக்கு ஒன்றில் தோற்றுப் போய்விட்டார் . ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல , அது ஏழு ஆண்டுப் போராட்டம் . தோற்ற பின்னர் அவர் சொன்னது : ஏழு ஆண்டுகள் போராடியதால் எனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது . நான் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை . இந்த வழக்கில் போராடியதே ஒரு வெற்றி தான் . இந்த தோல்வி குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் ஏதுமில்லை . நான் வேறு மாதிரி (வழக்காடாமல்) இருந்திருக்க முடியாது.

எனது நண்பர் சொன்ன ஒரு உதாரணம் ஞாபகத்திற்கு வருகிறது . 'பாண்டியன் எக்ஸ்பிரஸ் விழுப்புரத்தில சிக்னலுக்காகப் போட்டிருவான் . அப்புறம் செங்கல்பட்டிலயும் . ஆனா சென்னைக்குக் கரெக்ட் டயத்திற்குப் போயிருவான் '

பரஸ்பர நிதி நிறுவனங்கள் , தங்கள் நிதி , சம்பந்தப்பட்ட குறியீட்டை எவ்விதம் தோற்கடித்தது என்று விளம்பரங்களில் தவறாமல் குறிப்பிடுவார்கள் . சென்செக்ஸ் 12 சதவீதம் கூடியிருக்கிறது. எங்கள் நிதி 13 சதவீதம் . ஒரு சதவீதம் என்ற அளவில் எங்கள் நிதி சென்செக்ஸைத் தோற்கடித்து விட்டது . சரி , சென்செக்ஸ் குறைந்தால் ? சென்செக்ஸ் 5 சதவீதம் குறைந்திருக்கிறது . எங்கள் நிதி 4 சதவீதம் . ஒரு சதவீதம் என்ற அளவில் சென்செக்ஸை நாங்கள் வென்று விட்டோம் . இது எப்படி இருக்கு ?

மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் 30 நிறுவனங்களால் ஆனது . அதே மாதிரி தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 நிறுவனங்களால் ஆனது . சந்தை ஒரு நாளில் கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதை அளவீடு செய்வதற்கான ஒரு கருவி மட்டுமே இந்தக் குறியீடுகள் . சந்தையின் பெரும்பாலான மதிப்பு வாய்ப்புகள் இந்தக் குறியீடுகளுக்கு அப்பால் உள்ளன . நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வளர்ந்த பின்னர் தான் அது இந்தக் குறியீடுகளில் இடம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் . நிறுவனம் குறிப்பிட்ட அளவில் வளர்ந்து விடும் போது அது அனைவருக்கும் தெரிந்த ஊரறிந்த இரகசியமாகி விடும் . அதன் மதிப்பு வாய்ப்புகள் மங்கி விடும் . வாரன் பஃபெட் சொல்வது மாதிரி you can't buy what is popular and value. பிரபல்யத்தையும் மதிப்பையும் ஒருசேரக் கைப்பற்ற முடியாது . ஒரு நிறுவனம் சந்தைக் குறியீடுகளில் இடம் பெறப் போகிறதென்றால் குறியீட்டு பரஸ்பர நிதிகள் அந்தப் பங்கை வாங்கியாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும் . இதை எதிர்பார்த்து குறுகிய கால வணிகர்கள் அந்தப் பங்குகளை வாங்க முனைவதால் பங்கின் விலை உயர்ந்து விடும் . அந்தப் பங்குகளை வாங்க முற்படுவது buy high ன் பாற்பட்டது . இதற்கு மாறாக இன்னொரு உத்தியைக் கையாளலாம் . ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பங்கு குறியீட்டில் இணைக்கப்படும் போதும் ஒரு பங்கு குறியீட்டிலிருந்து நீக்கப்படும் . குறியீட்டு பரஸ்பர நிதிகள் இந்தப் பங்குகளை விற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும் . இதை எதிர்பார்த்து வணிகர்கள் இந்தப் பங்குகளை விற்று வைப்பதால் பங்கின் விலை குறைந்து விடும் . நாம் இந்தப் பங்குகளை buy low என்ற முறையில் வாங்கலாம் . இவ்வாறு குறியீடுகளை விட்டு நீக்கப்படும் பங்குகளில் முதலீடு செய்வது குறியீடுகளில் இணைக்கப்படும் பங்குகளில் முதலீடு செய்வதை விட இலாபகரமாக இருக்கும் .

குறியீடுகளில் பங்குகளை இணைப்பதிலும் விடுவிப்பதிலும் தவறு நிகழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன . அமெரிக்க Dow Jones குறியீட்டில் 1932 ஆம் ஆண்டு IBM நிறுவனம் இணைக்கப்பட்டது . 1939 ஆம் ஆண்டு IBM நிறுவனம் Dow Jones குறியீட்டிலிருந்து நீக்கப்பட்டது . மீண்டும் 1979 ஆம் ஆண்டு IBM நிறுவனம் Dow Jones குறியீட்டில்  இணைக்கப்படுகிறது . இந்த 40 ஆண்டுகால இணைப்பின்மை இல்லாவிட்டால் Dow Jones குறியீட்டின் இன்றைய மதிப்பு 22000 புள்ளிகள் கூடுதலாக இருக்கும் ! Dow Jones குறியீட்டின் CAGR எங்கேயோ போயிருக்கும் . அந்த வகையில் குறியீட்டு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய இழப்பு .

இவ்வாறாக பங்குச்சந்தையின் பெரும்பான்மையான மதிப்பு உருவாக்கங்கள் குறியீட்டிற்கு வெளியே நிகழ்ந்த வண்ணம் உள்ளன . மேலும் குறியீட்டை அளக்கும் அளவையே தவறாகவும் உள்ளது .

ஒருமுறை வாரன் பஃபெட்டின் சொந்த ஊரில் அவருடைய முதலீட்டு நிறுவனத்தில் அதன் ஆரம்ப காலங்களில் முதலீடு செய்து இன்றளவும் அந்தப் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . இந்த மாதிரி உங்கள் நிறுவனம் Dow Jones குறியீடு மாதிரி இரண்டு மடங்கு வருமானம் கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா ? பெரும்பாலானவர்கள் சொன்ன பதில் அப்படியா ? எங்களுக்குத் தெரியாது ! They don't just aware of it . அவர்களுக்கு அதனைப் பற்றிய உணர்வு துளியளவும் இல்லை .

சேமிப்பு என்பது தாழப் பறந்து பணத்தைச் சேர்ப்பது . முதலீடு என்பது இவ்வாறு சேமிக்கப்பட்ட உபரிப் பணத்தைப் பணவீக்கத்தை வெல்லும் வகையில் முதலிடுவது . இந்த ஆட்டத்தில் குறியீடுகளை வென்றால் நன்று . வெல்லாவிட்டாலும் நன்று .

சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலின் சில வரிகளுடன் இந்தப் பதிவை முடிக்கலாம் . விளையாட்டில் ஜெயித்து கோப்பையைப் பெற்றுக் கொடு கோப்பையைப் பெற்றுக் கொடு என்று உயிரை எடுக்கிறார்கள் . அவர்களுக்குத் தெரியவில்லை, இந்த விளையாட்டே ஒரு வெற்றி என்று .

பங்குச்சந்தை ஆட்டம் உட்பட வாழ்க்கையின் எந்த ஆட்டத்திலும்
வெற்றிக்காக விளையாடாதீர்கள் . விளையாட்டிற்காகவே விளையாடுங்கள்
. விளையாட்டிற்காக விளையாடும் போது வெற்றி பெற வேண்டும் என்ற மன அழுத்தம் ஏற்படாது . இவ்வாறு மனம் இறகு மாதிரி இருப்பது தான் வெற்றிக்கான விலாசம் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14