பங்குச்சந்தை சூதாட்டக்களமா ?
பங்குச்சந்தை சூதாட்டக்களமா ?
அல்ல , அது சொத்து உருவாக்கும் களம் . பங்குச்சந்தையில் பெரும்பான்மையான வர்த்தகங்கள் தின மற்றும் குறுகிய கால அளவுகளில் பங்குகளின் ஏற்ற இறக்கங்களைப் பணமாக்கம் செய்யும் விதமாக சூதாடும் ஒரு தன்மையுடன் இருப்பதென்னவோ உண்மை தான் . பெரும்பாலோனோர் இவ்வாறு செய்வதால் நாம் பங்குச்சந்தையை ஒரு சூதாட்டம் என்று ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ளக்கூடாது . பங்குச்சந்தையின் தலையாய பலன்களாக முதல் உருவாக்கம் (Capital Formation) மெய்நிகர் பணம் (Virtual Money) மற்றும் நீர்மை நிறைத்தன்மை (Liquidity) போன்றவற்றைக் குறிப்பிடலாம் . இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர் பொதுவாக வெவ்வேறு சந்தைகளில் நடைபெற்று வரும் சூதாட்டம் குறித்துக் கொஞ்சம் பார்க்கலாம் .
வீடு மற்றும் நிலம் :
பங்கு முதலீடுகளுடன் ஒப்பிடும் போது வீடு மற்றும் நில முதலீடுகள் நீண்ட கால அளவிலும் ஒரு நிலைத்தன்மையுடனும் இருப்பது கண்கூடு . பங்கு விலைகள் அன்றாடம் வெளியாவது மாதிரி வீடு மற்றும் நிலங்களின் விலைகள் தின அளவில் வெளி வருவதில்லை . யாராவது வீடு போன்ற சொத்துக்களை எப்போதாவது விற்கும் போது மட்டும் ஒரு ஆர்வம் என்ற அளவில் என்ன விலைக்குப் போனது என்று விசாரித்து வைப்பதுடன் நமது வேலை முடிந்து விடும் . விற்கப்படுவதான அந்த சொத்தின் மதிப்பு குறைவாக இருந்தால் distress selling என்று கூறிக்கொள்வோம் . கூடுதலாக இருந்தால் நமது சொத்து எவ்வளவுக்குப் போகும் என்று கணக்கிட்டுக் கொள்வோம் . மற்றபடி வீட்டை வைத்துச் சூதாடுவது என்பது நமது கனவிலும் நடைபெறாத ஒரு காரியம் . அது அவ்வாறு தானா ? வீட்டை வைத்து யாரும் ஊக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையா ? 2008 ன் அமெரிக்க sub prime crisis க்கு அடிப்படையான காரணம் இத்தகைய ஊக நடவடிக்கைகள் தான் .
கடன் பத்திர சந்தை :
பங்கு முதலீடுகளுடன் ஒப்பிடும் போது fixed income investments என்று சொல்லப்படும் கடன் பத்திர முதலீடுகள் மிகுந்த நிலைத்தன்மை கொண்டவை . பங்குகள் மாதிரி இவை ஒரே நாளில் ஏறி இறங்காது . அதனால் தான் இந்த முதலீடுகளுக்கு fixed income investments என்று பெயர் வந்தது . ஆனால் உண்மையிலேயே அது அவ்வாறு தானா ? அதில் ஊக வணிகத்திற்கு இடமில்லையா ?
கடன் பத்திரங்களில் அடிப்படையாக என்ன நிகழ்கிறது என்றால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குக் கடன் பத்திரங்களை வாங்குகிறீர்கள் . அதற்கு உங்களுக்கு வருடாவருடம் வட்டி கிடைக்கப்பெறும் . முதலீட்டுக் கால முடிவில் நீங்கள் கட்டிய தொகை திரும்பக் கிடைக்கும் . இந்தக் கடன் பத்திரங்களுக்குத் தரவரிசை (rating) உண்டு . மிகவும் பாதுகாப்பான கடன் பத்திர முதலீடுகளுக்கு AAA என்பதான தரக்குறியீடு . AA , A , BB , B ... என்பதாக குறையும் வரிசையில் தரக்குறியீடுகள் இருக்கும் . குறைவான தரக்குறியீடு பெற்ற முதலீடுகளுக்கு இந்தக் குறையும் தரத்தை ஈடு செய்யும் விதமாக அதிக வட்டி கிடைக்கும் .
கடன் பத்திர சந்தை (Bond Market) என்பது பங்குச்சந்தை மாதிரியே ஒரு மிகப்பெரிய சந்தை . இதில் Junk Bonds என்று ஒரு வகை உண்டு . அதாவது தரமேயில்லாத நிறுவனங்கள் வெளியிடும் தரமற்ற கடன் பத்திரங்கள் . அதனை ஈடுகட்டும் விதமாக விண்ணை முட்டும் வட்டி . நீங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வரும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது . இது சூதாட்டம் அன்றி வேறென்ன ?
பரஸ்பர நிதிகள் :
குறியீட்டு பரஸ்பர நிதிகள் (Index Funds) பொதுவாக நீண்ட காலத்திற்கானவை . வளர்ந்து வரும் ஒரு தேசத்தின் வளர்ச்சியில் குறைந்த பட்ச உராய்வுச்செலவுகளுடன் (frictional costs) பங்கு பெறுவதன் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை . நீண்ட கால அளவில் இந்தக் குறியீட்டு நிதிகள் மற்ற பன்மய நிதிகளை (diversified funds) விஞ்சும் வகையில் வருமானங்களை அளிக்கவல்லவை . ஏனெனில் மேலாண்மைச் செலவு , பங்குகளை வாங்கி விற்பதற்கான தாக்கச்செலவு (impact cost) மற்றும் வரி வகையறாக்கள் இவற்றில் மிகவும் குறைவு . எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது . பின்னர் ETF என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள் . ETF என்றால் Exchange Traded Fund என்பதன் சுருக்கம் . குறியீட்டு நிதிகளை பங்குச்சந்தையின் வர்த்தகம் முடிந்த பின்னர் பங்குகளின் முடிவு
விலைக்கு மட்டுமே வாங்க முடியும் . ETF களை சந்தை நடைபெறும் போதே வாங்க முடியும் . உதாரணமாக பதினோரு மணிக்கு சென்செக்ஸ் 60000 புள்ளிகள் என்றால் 60 ரூபாய்க்கு சென்செக்ஸ் ETF ன் ஒரு யூனிட்டை வாங்கலாம் . பனிரெண்டு மணிக்கு சென்செக்ஸ் 60500 புள்ளிகள் ஏறுவதாகக் கொள்வோம் . சென்செக்ஸ் ETF 60.50 என்று வர்த்தகமாகும் . நம்மவர்கள் பதினோரு மணிக்கு இதனை வாங்கி பனிரெண்டு மணிக்கு விற்று இந்த intra day swing ஐ பணமாக்கம் செய்ய முயல்வார்கள் . இது சூதாட்டம் அன்றி வேறென்ன ?
பொருள் சந்தை :
பொருள் வர்த்தகம் (commodity trading) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அதனுடைய அடிப்படையைச் சுருக்கமாகச் சொல்கிறேன் . விவசாயி ஒருவர் கோதுமையை விளைவிப்பதாகக் கொள்ளலாம் . அறுவடைக்காலத்தில் அது என்ன விலைக்குப் போகும் என்று உத்தரவாதமாகத் தெரிந்தால் அவருக்கு மன நிம்மதி கிடைக்கும் . மேலும் அவருடைய எதிர்காலத் திட்டமிடலுக்கும் அது உதவிகரமாக இருக்கும் . இந்தக் கோதுமையை வாங்கி ரொட்டி தயாரிக்கும் அடுமனையாளர் (baker) ஒருவர் இருக்கிறார் . அவருக்கும் கோதுமையின் விலை தெரிய வந்தால் உதவிகரமாக இருக்கும் . இந்த இரண்டு பேரும் பொருள் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்கிறார்கள் . இந்த ஒப்பந்தத்தினால் விவசாயி மற்றும் அடுமனையாளர் இருவருக்கும் விலை குறித்த ஒரு நிச்சயம் கிடைக்கப்பெறுகிறது . இந்த ஒப்பந்தத்தினால் இந்த இருவருக்கும் வேறு ஒரு சின்னப்பிரச்னை உள்ளது . விவசாயி எதிர்கால கோதுமை விலையேற்றத்தை விட்டுக் கொடுக்கிறார் . ஒப்பந்தத் தேதியில் வெளிச்சந்தையில் கோதுமை விலை கூடுதலாக விற்றாலும் அவர் ஒப்பந்த விலைக்கு மட்டுமே விற்க முடியும் . அதே மாதிரி அடுமனையாளர் எதிர்கால கோதுமை விலை இறக்கத்தை விட்டுக் கொடுக்கிறார் . ஒப்பந்தத்தேதியில் வெளிச்சந்தையில் கோதுமை விலை குறைவாக விற்றாலும் அவர் ஒப்பந்த விலைக்கு மட்டுமே வாங்க முடியும் . இது வரை பிரச்னை ஏதுமில்லை . ஆனால் பயிரிடாத விவசாயிகளும் ரொட்டி சுடாத அடுமனையாளர்களும் இந்தப் பொருள் வணிக ஊக வர்த்தகத்தில் ஈடுபடும் போது பிரச்னை வருகிறது .
பணச் சந்தை :
பங்குச்சந்தையை விடப் பெரிய சந்தை ஒன்று செயல்படுவது உங்களுக்குத் தெரியுமா ? மேலும் இந்த சந்தை 24 மணி நேரமும் செயல்படுவதான ஒரு சந்தை . Currency Exchange என்பதாக அழைக்கப்படும் பணச்சந்தை தான் அது . பணச்சந்தை , இழப்புக் காப்பு (Hedging) நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது . உலகளாவிய நிறுவனங்கள் வெவ்வேறு நாட்டு நாணயங்களில் பணம் ஈட்டும் . இந்திய ரூபாய்க்கு எதிராக பிற நாட்டு நாணயங்களின் மதிப்பு ஏறி இறங்கிய வண்ணமாக இருக்கும் . இந்த ஏற்ற இறக்கங்களுக்கான இழப்புக்காப்பு என்ற அடிப்படையில் பணச்சந்தை உருவாக்கப்பட்டது . ஆனால் சாமானியர்களும் இந்தச் சந்தையில் சூதாடுவதான ஒரு போக்கு நிலவுகிறது . வெவ்வேறு நாணயங்களுக்கு இடையிலான இந்த சூதாட்டம் போதாதென்று வெறும் நாணயத்தைக் கொண்டு சூதாடும் பிட்காயின் சூதாட்டம் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது . முட்டாள்களின் முட்டாள்தனத்தைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் என்ற பொன்மொழி நினைவுக்கு வருகிறது .
பங்குச்சந்தை :
கடைசியாக பங்குச்சந்தை . பங்குச்சந்தையில் தின மற்றும் குறுகிய கால வணிகம் மட்டுமின்றி பங்குகளை விற்று வாங்குதல் (Short Selling) மற்றும் F & O என்று அழைக்கப்படும் Future and Options வகையிலும் ஊக வணிகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன . Short selling , மீமிகை மதிப்பீட்டில் வர்த்தகமாகும் டுபாக்கூர் நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியையும் தற்காலிகமான பிரச்னைகளுக்கு உள்ளாகும் தரமான நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சியையும் பணமாக்கம் செய்வதற்கான ஒரு கருவியாகும். ஆனால் நடைமுறையில் இது ஊக வணிகக் கருவியாகி விட்டது . Short selling என்பது ஆகப்பெரிய அபாயமான ஒரு கருவியாகும் . நீங்கள் ஒரு நிறுவனப் பங்கை short செய்த பிறகு நீங்கள் நினைத்த கால அளவில் அந்தப் பங்கின் விலை குறையவில்லை என்றால் சிக்கலாகி விடும் . அதே மாதிரி short ல் இலாபம் வரம்புக்கு உட்பட்டது . நஷ்டம் வரம்பில்லாதது . நீங்கள் விலை குறையும் என்று short செய்த ஒரு பங்கு எதிர்த்திசையில் சென்று விலை உயர்வதாகக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் .
F & O க்கள் பங்குத் தொகுப்புக்கு இழப்புக்காப்பு என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டன . ஆனால் நடைமுறையில் பங்குத் தொகுப்பே இல்லாமல் வியாபாரம் செய்வதற்கான ஒரு மிக முக்கியமான ஊக வணிகக் கருவியாகி விட்டது . பங்குச்சந்தையில் delivery based வர்த்தகத்தை விட இந்த F & O வணிகம் பன்மடங்கு என்ற அளவில் உள்ளது .
பங்குச்சந்தை ஏன் தேவை ?
இவ்வளவு ஊக வணிகங்கள் நடைபெற்றாலும் பங்குச்சந்தை ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை . பங்குச்சந்தையின் தலையாய பலன்களில் முதன்மையானது முதல் உருவாக்கம் . நிறுவனம் ஒன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது . நிறுவனத்திற்கு ஒரு கோடிப் பங்குகள் இருப்பதாகக் கொள்ளலாம் . ஒரு பங்கின் விலை 500 ரூபாய் என்ற விலையில் அது வெளியிடப்பட்டால் அதன் சந்தை மூலதனம் (Market Capitalisation)
500 கோடி . நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவுடன் விலை - வருவாய் விகிதம் (Price Earning Multiple - சுருக்கமாக PE) என்ற அளவீட்டில் அதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்தியத்தின் (Earnings Per Share - சுருக்கமாக EPS) பன்மடங்கில் வர்த்தகமாகும் . அது தரமான நிறுவனமாக இருந்து அதன் பங்குகளுக்கான தேவைப்பாடு அதிகரிக்கும் போது இந்த PE மடங்கும் அதிகரித்த வண்ணம் இருக்கும் . இது தான் முதல் உருவாக்கம் .
இந்த முதல் உருவாக்கம் virtual money என்று அழைக்கப்படும் புனைவுப் பணத்திற்கு அடிப்படையாகிறது . தரமான நிறுவனங்கள் பன்மடங்கு PE அளவுகளில் வர்த்தமாகும் . இந்தப் புனைவுப் பணத்தைக் (பங்குகளைக்) கொண்டு பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தலாம் . பங்குகளைப் புதிதாக வெளியிட்டு (QIP - Qualified Institutional Placement) கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம் . நிறுவனம் கரடிச்சந்தையில் குறை PE அளவுகளில் வர்த்தமாகும் போது பங்குகளைத் திரும்ப வாங்குதல் (share buyback) என்ற வகையில் சிறியதாவதன் மூலமாக வளரலாம் .
கடைசியாக Liquidity என்று அழைக்கப்படும் நீர்மை நிறை உருவாக்கம் . நிறுவனப் பங்குகளை சுட்டியின் ஒரு சொடுக்கில் (click of the mouse) பணமாக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் இந்த நீர்மை நிறை உருவாக்கத்தினால் சொத்தின் மதிப்பை ஒட்டியே பணமாக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் வெளிப்படையான மற்றும் குறைவான தரகு . இதனுடன் வீடு ஒன்றை விற்பனை செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள் .
பங்குச்சந்தையில் நீண்ட கால அளவில் மட்டுமே சொத்து உருவாக்கம் நடைபெறும் . MRF நிறுவனத்தின் சமீபத்திய EPS 2846.71 . அதன் தற்போதைய PE 27.21 . பங்கு விலை , EPS ஐயும் PE ஐயமும் பெருக்கினால் கிடைத்து விடும் . MRF பங்கின் தற்போதைய விலை 77458 ரூபாய் . தரமான நிறுவனப் பங்குகளைப் பல்லாண்டுகள் வைத்திருப்பது சொத்து உருவாக்கத்திற்கு அவசியமாகிறது . நீண்ட கால அளவிலான EPS உருவாக்கம் அதன் மூலமான PE பெருக்கம் இவை காலப்போக்கில் தான் நிகழும் . பல்லாண்டுகளின் இந்தக் கூட்டுப் பெருக்கத்தை நம் தேவைக்காக விரைவு படுத்த முடியாது .
ஆக பெரும்பாலோனோர் சூதாடுவதால் பங்குச்சந்தை , சூதாட்டச் சந்தை என்று ஆகி விடாது . பங்குச்சந்தை சூதாட்டக்களம் அல்ல . அது சொத்து உருவாக்கும் களம் .
Comments
Post a Comment