பங்குச்சந்தை அகராதி
பங்குச்சந்தை அகராதி
முக மதிப்பு
(Face Value)
பங்குகளின் முக மதிப்பு பொதுவாக 10 ரூபாய் என்ற அளவில் இருக்கும். ஒரு நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதல் (Equity Capital) 100000 ரூபாய் என்று கொண்டால் 10 ரூபாய் முக மதிப்பைக் கொண்ட 10000 பங்குகள் என்பதாகப் பொருள் கொள்ளலாம். இந்த முக மதிப்பிற்குத் தான் நிறுவனம் பங்காதாயம் (dividend) உள்ளிட்ட அனைத்துப் பலன்களையும் வழங்கும்.
ஒரு பங்குச் சம்பாத்தியம்
(Earnings Per Share - EPS)
ஒரு இலட்சம் ரூபாய் பங்கு சார் முதல் கொண்ட நிறுவனம் ஒன்று 20000 ரூபாய் நிகர இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். ஒரு பங்குச் சம்பாத்தியம் என்பது இந்த நிகர இலாபத்தை மொத்தப் பங்குகளால் வகுத்தால் கிடைத்து விடும். EPS = Net profit ÷ Total No of shares =2 ரூபாய்.
பங்காதாயம்
(Dividend)
நிறுவனம் ஒரு பங்குச் சம்பாத்தியமாக 2 ரூபாய் ஈட்டுகிறது என்று பார்த்தோம். இந்த இரண்டு ரூபாய் முழுவதையும் நிறுவனம் பங்காதாயமாக வழங்கி விடாது. ஒரு ரூபாய் பங்காதாயத்தை வழங்கி விட்டு மீதி ஒரு ரூபாயை வளர்ச்சி மற்றும் தினசரி செலவுகளுக்குப் (CAPEX என்று சுருக்கமாக அழைக்கப்படும் capital expenditure மற்றும் OPEX என்று அழைக்கப்படும் Operational expenditure) பயன்படுத்திக் கொள்ளும். Dividend = EPS - Capital/Operational Expenditure
பங்கு ஈட்டு விகிதம்
(Dividend Yield)
ஒரு நிறுவனத்தின் முக மதிப்பு 10 ரூபாய் என்று கொள்ளலாம். நிறுவனம் சந்தையில் 10 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகாது. 20 ரூபாய்க்கு வர்த்தகமாவதாகக் கொள்ளலாம். நிறுவனம் ஒரு ரூபாய் பங்காதாயம் வழங்குகிறதென்றால் Dividend Yield = dividend ×100 ÷ share price = 5 சதவீதம்.
பங்காதாயம் வழங்கல் விகிதம் (Dividend Payout Ratio)
நிறுவன EPS இரண்டு ரூபாய். ஆனால் dividend ஒரு ரூபாய் என்றால் பங்காதாயம் வழங்கல் விகிதம் Dividend × 100 ÷ EPS = 50 சதவீதம்
விலை வருவாய் விகிதம்
(Price Earning Ratio - PE Ratio)
ஒரு நிறுவனத்தின் முக மதிப்பு 10 ரூபாய். EPS 2 ரூபாய். நிறுவனம் 20 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. PE ratio = Price ÷ EPS= 10
பங்கு சார் முதல்
(Equity Capital)
நிறுவனம் ஒன்றின் பங்கு மூலதனம் பங்கு சார் முதல் என்று அழைக்கப்படும்.
கடன் சார் முதல்
(Debt Capital)
நிறுவனத்தின் கடன், கடன் சார் முதல் என்று அழைக்கப்படும்.
கடன் பங்கு விகிதம்
(Debt Equity Ratio)
நிறுவனத்தின் பங்கு சார் முதல் ஒரு இலட்சம் ரூபாய். கடன் சார் முதல் ஐம்பதினாயிரம் ரூபாய். கடன் பங்கு விகிதம் கடன் சார் முதல் × 100 ÷ பங்கு சார் முதல் = 50 சதவீதம்
பங்குப் பிரிப்பு
(Stock Split)
நிறுவனம் நன்கு வளர்ந்து விட்டது. EPS 200 ரூபாய் என்பதாக வைத்துக் கொள்ளலாம். நிறுவனம் நன்னெறியுடன் (ethical) செயல்பட்டு இலாபகரமாக இலாபமீட்டுவதால் சந்தை அதற்கு உயர் மதிப்பிலான 30 என்ற PEஐ வழங்குவதாகவும் கொள்ளலாம். பங்கின் விலை EPS × PE = 6000 ரூபாய். சிறு முதலீட்டாளர்கள் வாங்க ஏதுவாக நிறுவனம் முக மதிப்பான பத்து ரூபாய் என்பதை ஒரு ரூபாயாகப் பிரிக்கிறது. பங்கின் விலை இப்போது 600 ரூபாய். அதாவது 6000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கு 600 ரூபாய் மதிப்புள்ள பத்து பங்குகளாக மாறி விடுகிறது. இதுவே பங்குப் பிரிப்பு என்பதாக அழைக்கப்படுகிறது.
நிறுவனப் பிரிப்பு
(Demerger)
நிறுவனம் பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்ட வண்ணம் இருக்கிறது. ஒரு துறையை மட்டும் தனியே பிரித்து அதனைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது நிறுவனப் பிரிப்பு என்று அழைக்கப்படுகிறது. உங்களிடம் ஒரு கேள்வி. விப்ரோ நிறுவன IPO 1946 ல் வெளிவந்தது. அதன் மூன்று பங்குகள் பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பிற்குப் பின்னர் எத்தனை பங்குகளாக மலர்ந்திருக்கும்? Range of answers என்ற அடிப்படையில் மூன்று பதில்களைக் கொடுத்திருக்கிறேன். சரியான விடையைத் தேர்வு செய்யவும். விடை கடைசியில்.
A. 10000க்கு கீழ்
B. 50000 க்கும் 60000க்கும் இடையில்
C. 100000க்கும் மேல்
சந்தை மூலதனம்
(Market Capitalisation)
Market Capitalisation என்பது சுருக்கமாக Market Cap என்று அழைக்கப்படுகிறது. Market Cap = Total No of shares× Share price
காளைச்சந்தை
(Bull Market)
PE விரிவாக்கம் நிகழும் சந்தை
கரடிச்சந்தை
(Bear Market)
PE குறுக்கம் அடையும் சந்தை
Sideways Market
PE ஒரு சிறிய பட்டையில் (band) வர்த்தகமாகும் சந்தை. சந்தையின் பெரும்பாலான காலம் sideways சந்தைகளின் காலம் தான்.
இருப்பு மற்றும் உபரி
Reserves & Surplus
நிறுவனம் எல்லா இலாபத்தையும் பங்காதாயமாக வழங்கி விடாது. ஒரு பகுதியை மட்டும் வழங்கி விட்டு மீதியை வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளும். இந்தப் பணம் இருப்பு மற்றும் உபரி நிதி என்பதாக அழைக்கப்படுகிறது
இலவசப்பங்கு
(Bonus Shares)
இருப்பு மற்றும் உபரி நிதி ஓரளவு சேர்ந்த பின்னர் நிறுவனம் இவவசப்பங்குகளை வெளியிடும். ஒரு நிறுவனத்தின் பங்கு முதல் (Equity Capital) ஒரு கோடி மற்றும் இருப்பு / உபரி நிதி 20 கோடி எனறு வைத்துக் கொள்வோம். நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் இலவசப்பங்குகளை வழங்கினால் நிறுவன முதல் 2 கோடியாக உயர்ந்து விடும். இருப்பு-உபரி நிதி 19 கோடியாக குறைந்து விடும். பங்கின் விலை பாதியாகி விடும்.
உரிமைப் பங்கு
(Rights Shares)
நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு உரிமை என்ற அடிப்படையில் பங்குகளை வழங்குவது உரிமைப் பங்கு வெளியீடு. உரிமைப்பங்கு வெளியீடுகள் சந்தை விலையை விடக் குறைவான விலையில் வெளியிடப்படும். உரிமைப் பங்கு வெளியீட்டின் பின்னரும் நிறுவன பங்கு முதல் மற்றும் இருப்பு/உபரி நிதி மாற்றம் பெறும்.
பங்காதாய மறுமுதலீடு
(Dividend Reinvestment)
நிறுவனம் வழங்கும் பங்காதாயங்களை அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது பங்காதாய மறுமுதலீடு என்று அழைக்கப்படுகிறது. கரடிச்சந்தைகளில் நிறுவனப் பங்குகளில் பங்காதாய மறுமுதலீடு செய்வது ஒரு தேர்ந்த மதிப்பு முதலீட்டு உத்தியாகப் பார்க்கப்படுகிறது. DRIP என்று ஆங்கிலத்தில் செல்லமாக அழைக்கப்படும் இந்த Dividend Reinvestment Plan கள் துரதிர்ஷ்டவசமாக இந்தியப் பங்குச்சந்தையில் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. நாம் தான் தனிப்பட்ட முறையில் இந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். காளைச்சந்தையில் நிறுவனப்பங்குகள் உயர் விலையில் வர்த்தகமாகும் போது குறைவான பங்குகளையும், கரடிச்சந்தையில் நிறுவனப் பங்குகள் குறை விலையில் வர்த்தகமாகும் போது அதிகமான பங்குகளையும் DRIP முறையில் வாங்கலாம். Rupee cost averaging என்பதன் அடிப்படையும் இது தான்.
முதல் நிலைச் சந்தை
(Primary Market)
முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பங்குச்சந்தைகள் என்று தனியாக எதுவும் கிடையாது. பொதுவாக IPO வெளியீடுகள் முதல் நிலைப் பங்குச்சந்தை என்பதாக அழைக்கப்படுகிறது. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் IPO வெளியீடுகளின் போது தான் நம் பணம் நிறுவனத்திற்குச் செல்லும். முதல் உருவாக்கம் (capital formation) என்ற நிகழ்வு அப்போது தான் நடைபெறுகிறது.
இரண்டாம் நிலைச் சந்தை
(Secondary Market)
பங்கு பட்டியலிடப்பட்டவுடன் வர்த்தகமாவது இரண்டாம் நிலைப் பங்குச்சந்தை என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. தனிப்பட்டு இரண்டாம் நிலைப் பங்குச்சந்தை என்று எதுவும் கிடையாது. எல்லாமே ஒரு சந்தை தான். இரண்டாம் நிலைப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஊக வணிகர்கள் ஒருவருக்கொருவர் பங்குகளை வாங்கி விற்கவோ அல்லது விற்று வாங்கவோ செய்வார்கள்.
முதன்மைப் பங்கு வெளியீடு
(Initial Public Offer - IPO)
நிறுவனம் முதன் முறையாகத் தனது பங்குகளைச் சந்தையில் பட்டியலிடுவது IPO என்று அழைக்கப்படுகிறது. நிறுவனங்கள் முக மதிப்பு + உயர் மதிப்பு என்ற முறையில் பங்குகளை வெளியிடும். பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டவுடன் பங்குகளுக்கான தேவைப்பாட்டைப் பொறுத்து பங்குகள் உயர் விலையில் வர்த்தகமாகும். இதனை PE உருவாக்கம் என்பதான ஒரு செயல்முறையாகவும் கொள்ளலாம்.
தொடர்மைப் பங்கு வெளியீடு
(Follow on Public Offer - FPO)
ஏற்கனவே நிறுவனம் IPOவில் தனது 10 சதவீத பங்குகளை வெளியிட்டு விட்டது என்று கொள்வோம். இரண்டாம் முறையாக இன்னொரு பகுதிப் பங்குகளை வெளியிடுவது FPO என்று அழைக்கப்படும். பொதுவாக அடிக்கடி பங்குச் சந்தைக்கு வந்து தனது பங்கு முதலை (Equity Capital) நீர்மைப்படுத்தும் நிறுவனங்களுக்கு சந்தை உயர் மதிப்பிலான PEஐ வழங்காது.
உயர் மதிப்பு
(Premium)
IPO வில் நிறுவனம் பங்குகளை வெளியிடும் போது முக மதிப்பில் வெளியிடாது. முக மதிப்பு + உயர் மதிப்பில் தான் வெளியிடும். நிறுவனம் ஏற்கெனவே இலாபம் ஈட்டத் தொடங்கியிருக்கலாம். இலாபம் ஈட்டினால் EPS என்ற அளவுகோல் வந்து விடுகிறது. EPS வந்தால் அதனுடன் PE என்ற அளவுகோலும் வந்து விடும். இலாபம் ஈட்டத் தொடங்காவிட்டால் கூட goodwill என்ற அடிப்படையில் உயர் மதிப்பில் தான் நிறுவனங்கள் பங்குகளை வெளியிடும். இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது முக மதிப்பிற்குத் தான் பங்காதாயம் உள்ளிட்ட அனைத்துப் பலன்களும் கிடைக்கும். உயர் மதிப்பிற்கு எதுவும் கிடையாது.
மதிப்பு முதலீடு
(Value Investing)
ஒரு ரூபாய் மதிப்புள்ள பங்கை அதன் பாதி விலையில் வாங்குவது. IRCTC நிறுவனம் அதன் IPO விலையான 300களில் மதிப்பு முதலீடு.
வளர்ச்சி முதலீடு
(Growth Investing)
IRCTC நிறுவனம் பட்டியலிடப்பட்ட விலையான 600களில் வளர்ச்சி முதலீடு. நிறுவனத்தின் வளர்ச்சி சராசரிக்கும் மேலாக இருக்கும் என்பதாகக் கணித்து உயர் மதிப்பிலான PE அளவீட்டில் வாங்குவது.
வேக முதலீடு
(Momentum Investing)
IRCTC நிறுவனம் அதன் தற்போதைய விலையான 2000 ரூபாய் என்ற அளவில் வேக முதலீடு. PE அளவீட்டை ஒரு பொருட்டாக மதிக்காமல் சந்தையின் போக்கில் போவது.
இந்தப் பங்குச்சந்தை அகராதியில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பதத்திற்கும் இடையிலான தொடர்பு. பங்குச்சந்தையின் இந்த நகரும் பகுதிகளை நீங்கள் புரிந்து கொண்டால் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு நிறுவனம் தனது ஒரு பங்குச் சம்பாத்தியம் அத்தனையையும் பங்காதாயமாக வழங்கி விடாது. வழங்கவும் கூடாது. ஆங்கிலத்தில் retained earnings என்று சொல்வார்கள். இந்த உபரி நிதி தான் பின்னர் நிறுவனம் வளர உதவும் எரிபொருள். ஆக பங்காதாயத்தை மட்டும் பார்க்காமல் பங்காதாயம் வழங்கு விகிதத்தையும் நாம் பார்க்க வேண்டும். வளர்ந்து வரும் நிறுவனங்கள் 10 சதவீதம் என்ற குறைவான அளவில் தான் பங்காதாயத்தை வழங்கும். ஒரு நிறுவனம் அனைத்து வருமானத்தையும் பங்காதாயமாக வழங்கினால் நிறுவனத்திற்கு வளர்ச்சி வாய்ப்புக்களே இல்லையா என்பதான ஒரு கேள்வி எழுந்து விடுகிறது. அதே மாதிரி பங்கின் விலை குறையக் குறைய பங்கு ஈட்டு விகிதம் கூடும். மிகவும் உயர் பங்கு ஈட்டு விகிதம் என்றால் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொருள். பங்குகளின் விலை கூடினால் பங்கு ஈட்டு விகிதம் குறைந்து விடும். பொதுவாகத் தரமான பங்குகள் குறைவான பங்கு ஈட்டு விகிதத்தில் தான் வர்த்தகமாகும். இந்தத் தலைகீழ் விகிதத்திலும் நாம் கவனம் கொள்ள வேண்டும். பங்கு சார் முதல் மற்றும் கடன் சார் முதல் இந்த இரண்டையும் நிறுவனம் சமன் செய்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பங்கின் முக மதிப்பு என்ற முக்கியமான மதிப்பை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் முக மதிப்பிற்குத் தான் அனைத்துப் பலன்களும் கிடைக்கப்பெறும். உபரி நிதி எவ்விதம் இலவசப்பங்குகளாக உருமாற்றம் அடைகிறது மற்றும் இலவசப்பங்குகள் வழங்குதலுக்கும் நிறுவனத்தின் விலைக்கும் உள்ள எதிரெதிர் தொடர்பு... கரடிச்சந்தையில் PE குறுக்கம் அடையும் அதே வேளையில் மதிப்பு எவ்விதம் பெருக்கம் அடைகிறது என்ற கோணமும் மிகவும் முக்கியமானது. அகராதியை இவ்விதமான ஒரு பார்வையில் மீண்டும் படிக்க வேண்டுகிறேன்.
சரியான விடை : C
மூன்று விப்ரோ பங்குகள் தற்போது 1148120 பங்குகளாக வளர்ந்திருக்கிறது. இது பதிவுப்பிழை அல்ல நண்பர்களே, நீங்கள் வாசித்தது சரி தான். மூன்று விப்ரோ பங்குகள் தற்போது பதினோரு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நூற்றி இருபது பங்குகளாக வளர்ந்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டிற்கான விப்ரோ நிறுவன பங்காதாயம் பங்கு ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் விப்ரோ நிறுவன IPO முதலீட்டாளர் 1148120 ரூபாய் பங்காதாயப் பலன்களைப் பெறுவார்.
Comments
Post a Comment