மாயமான் வேட்டை

மாயமான் வேட்டை

நண்பர் ஒருவரின் கேள்வி. காய்கறி வியாபாரம் செய்பவர் காலை 500 ரூபாய் உடன் சந்தைக்கு வருகிறார். காய்கறிகளைக் கொள்முதல் செய்கிறார். மாலைக்குள் தெருத்தெருவாகச் சுற்றிக் காய்கறிகளை விற்று விடுகிறார். அதில் ஒரு இலாபம் கிடைக்கப் பெறுகிறது. இது தான் அவருடைய தினசரி நடைமுறை. அல்லது தட்டச்சு அலுவலகம் ஒன்றைப் பாருங்கள். அங்கு ஆதாரமாக என்ன நடக்கிறது? காலையில் பூஜ்யத்தில் தொடங்கும் அந்த அலுவலகத்தில் மாலைக்குள் குறைந்த பட்சமாக 500 ரூபாய் சம்பாதிக்கலாம். இதே மாதிரி பங்குச்சந்தையில் ஏன் சம்பாதிக்க முடியாது? காலையில் பங்குகளை வாங்க வேண்டியது, மாலைக்குள் விற்று விட்டு ஏன் இலாபம் பார்க்க முடியாது? அல்லது பங்குத் தரகு நிறுவனங்கள் சொல்வது மாதிரி குறுகிய கால அளவில் இலக்கு விலை வைத்து ஏன் இலாபம் சம்பாதிக்கக் கூடாது? சுருக்கமாகச் சொல்வதென்றால் பங்குச்சந்தையில் ஏன் தினசரி மற்றும் குறுகிய கால வணிகம் செய்யக்கூடாது?

ஏனென்றால் பங்குச்சந்தை தினசரி மற்றும் குறுகிய கால அளவுகளில் சீரற்ற நடை (random walk)  தான் பயிலும். அதுவும் தினசரி வணிகம் பூவா தலையா என்ற அடிப்படையில் தான் நகரும். தினசரி பத்து வர்த்தகம் செய்தால் ஐந்து இலாபம் ஐந்து நஷ்டம் என்று தான் முடியும். மேலும் இந்தத் தினசரி வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான செலவுகள் மற்றும் வரி வகைகளைக் கழித்து பின்னர் தான் இலாபம் ஈட்ட முடியும்.

பொதுவாக தினசரி வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அது பங்குச்சந்தையில் தலைகீழாக நடக்கும். ஒன்றிரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். அடுத்த பத்து நிமிடங்களில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது நம் கையில் உள்ளது. (கொஞ்சம் தத்துவார்த்தமாகச் சொல்வதானால் அது கூட நம் கையில் இல்லை) ஆனால் பங்குச்சந்தையில் அது நேரெதிர். அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு பங்கின் விலை கூடுமா அல்லது குறையுமா என்று யாராலும் கணிக்க முடியாது. இந்தக் கணத்தில் இருந்து அடுத்த பத்தாண்டுகளில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் பங்குச்சந்தையில் இதனை எளிதாகக் கணிக்க முடியும். மதிப்பு முதலீடாக வாங்கிய தரமான நிறுவனப் பங்குகள் கட்டாயமாக உயர் மதிப்பில் வர்த்தகமாகும். வாழ்க்கையில் நாம் செயல்பாடு என்றால் எதையாவது செய்வது என்பதாக உருவகம் செய்து வைத்திருக்கிறோம். சும்மா இருப்பதும் ஒரு செயலே. பாவ்லோ என்பவரின் ஒரு பொன்மொழி ஞாபகத்திற்கு வருகிறது. 'வாழ்க்கையில் பல பிரச்னைகள் நாம் ஒரு அறையில் வெறுமனே உட்காராமல் இருப்பதால் மட்டுமே வருகிறது' பங்குச்சந்தையில் பெரும்பாலான நேரம் நாம் சும்மா இருந்தாலே போதும். இவ்வாறு சும்மா இருப்பதும் ஒரு செயலே. இவ்விதமாக ஒரு ஆசிர்வாதமான புறக்கணிப்பை மேற்கொண்டாலே போதுமானது. சின்ன வயதில் மரம் செடி கொடிகளின் உருப்பெருக்கி வழியான தலைகீழ் நிழல் பிம்பத்தை சுவரில் பிடித்து விளையாடியது நினைவிற்கு வருகிறது. நமது கண்கள் வழியாக நாம் பார்க்கும் இந்த உலகமும் நம் விழித்திரை உருப்பெருக்கியின் ஊடாகச் சென்று தலைகீழாகத் தான் விழுகிறது. அந்தத் தலைகீழ் பிம்பத்தை நேர் படுத்திப் பார்ப்பது நமது மூளை. நமது கண்கள் எதையும் பார்ப்பதில்லை. மூளை தான் பார்க்கிறது. அதே மாதிரி இந்தப் பங்குச்சந்தை உலகையும் நேர் படுத்திப் பார்க்கும் ஒரு பார்வை மிக முக்கியமானது.

நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறீர்கள். நிறுவனம் ஓராண்டின் முடிவில் தனது இலாப நஷ்டக் கணக்கை வெளியிடுகிறது. [இப்போது நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் இலாப நஷ்டக் கணக்கை வெளியிடுகின்றன. இதனை ஓராண்டு என்று மாற்றம் செய்தால் பங்குச்சந்தையின் இரைச்சல் (noise) கொஞ்சம் குறையும்] ஓராண்டில் நிறுவனத்தின் நிகர இலாபம் 20 சதவீதம் கூடியிருக்கிறது. ஒரு பங்குச் சம்பாத்தியமும் (Earnings Per Share) 20 சதவீதம் கூடும் என்பது தெளிவு. ஒரு பங்குச் சம்பாத்தியம் கூடினால் பங்கின் விலையும் கூடும். இனி கொஞ்சம் கவனமாகப் படிக்க வேண்டுகிறேன். ஒரு நிறுவனத்தின் EPS இருபது ரூபாய். PE ratio என்று அழைக்கப்படும் விலை வருவாய் விகிதத்தின் ( Price Earning ratio) மதிப்பு இருபது. இந்த இரண்டையும் பெருக்கினால் கிடைப்பது தான் பங்கின் விலையான 400 ரூபாய். அடுத்த ஆண்டு நிறுவன EPS இருபது சதவீதம் கூடுகிறது. இப்போது EPS இருபத்து நான்கு ரூபாய் ஆகி விடும். PE மதிப்பு இருபது. தற்போதைய EPS மற்றும் PE இரண்டையும் பெருக்கினால் பங்கின் விலை 480 ஆகி விடும். ஒரு நிறுவனம் தொடர்ந்து ஆண்டாண்டு காலம் இந்த மாதிரி இருபது சதவீதம் இலாபம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். எளிமையாக எழுதி விட்டேன். இது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இந்தத் தடை தாண்டும் பந்தயத்தில் வெற்றி பெறுகின்றன. முதல் வருடம் ஒரு இலாபம். இரண்டாம் வருடம் அந்த இலாபத்திற்கு இருபது சதவீதம் இலாபம். மூன்றாம் வருடம் இரண்டாம் வருட இலாபத்திற்கு இருபது சதவீதம் இலாபம் என்பதாக இந்தத் தடை தாண்டும் ஓட்டத்தின் உயரம் கூடிக்கொண்டே செல்லும். இந்த இடத்தில் தான் PE விரிவாக்கம் என்பது நிகழ்கிறது. சந்தை இந்த மாதிரியான தனித்துவமான நிறுவனங்களுக்கு உயர் மதிப்பிலான PE ஐ வழங்கும். PE மதிப்பு 30 என்று கொண்டால் பங்கின் விலை 720 ஆக உயர்ந்து விடும். இவ்வாறு தான் பங்குச்சந்தையில் மதிப்பு உருவாக்கம் என்பது நிகழ்கிறது. இதில் மிகவும் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் இந்த மதிப்பு உருவாக்கம் என்பது தின அடிப்படையில் நிகழாது. காலப்போக்கில் தான் நிகழும். காளைச்சந்தையில் இந்த PE இன்னும் உயர் மதிப்பிற்குச் செல்லும். இந்தப் பதிவை எழுதும் இன்றைய தேதியில்  Asian Paints ன் PE மதிப்பு 85.23 ஆக உள்ளது. Pidilite industries ன் PE மதிப்பு 104.3 ஆகும். மீமிகை கரடிச்சந்தையில் கூட இம்மாதிரி பசுமை மாறாப் பங்குகளின் (ever green stocks) PE மதிப்பு 30 க்குக் குறையாது. இவ்வாறாக தரமான நிறுவனங்களின் PE உயர் மதிப்பில் வர்த்தகமாகும். இன்னும் சில நிறுவனங்கள் இதனை விட உயர் PE மதிப்பில் வர்த்தகமாவதெல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் இந்த உயர் மதிப்பை, சந்தை, நிறுவனங்கள் தனக்கென ஒரு சாதனைப் பாதையை (track record) உருவாக்கிக் கொண்ட பின்னர் தான் வழங்கும். வளர்ந்து வரும் EPS, அதைப் பின்தொடரும் PE, இன்னும் வளரும் EPS, உயர் மதிப்பிலான PE என்பதான ஒரு நேர் பின்னூட்ட வளையம் (positive feedback loop) சுழலத் தொடங்கும். நிறுவனம் இலவசப்பங்குகளை வழங்கும். பங்குப் பிரிப்பு மற்றும் நிறுவனப் பிரிப்பு என்று இது ஒரு தொடர் கதை... 

தினசரி வணிகத்தைக் கொஞ்சம் கிட்டே சென்று ஆராயலாம். தினசரி வணிகத்தில் நாம் சந்தையின் போக்கிற்குத் தக்கவாறு உத்திகளை மாற்றிய வண்ணம் இருக்கவேண்டும். காளைச்சந்தை என்றால் வாங்கி விற்க (long) வேண்டும். கரடிச்சந்தை என்றால் விற்று வாங்க (short)  வேண்டும். Sideways சந்தை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. சந்தை காளையாகவும் இல்லாமல் கரடியாகவும்  இல்லாமல் குறிப்பிட்ட சில புள்ளிகளுக்குள் சுற்றிச்சுற்றி வருவது sideways market என்பதாக அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதுமான சந்தைகளின் பெரும்பாலான காலம் இந்த sideways சந்தைகளின் காலம் தான். தினம் சந்தை சில குறிப்பிட்ட புள்ளிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தால் எதை வாங்க? எதை விற்க? ஒரு முதலீட்டுத் திட்டம் சந்தையின் போக்கிற்கு ஏற்ப மாறுபடுவதாக இருந்தால் அது ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் அல்ல. தரகு நிறுவனங்கள் ஒரு பங்கை வாங்குமாறு பரிந்துரைக்கும். இவ்வாறான பரிந்துரைகள் வெள்ளிக்கிழமை இரவு வெளி வருவதாக வைத்துக் கொள்வோம். நம்மவர்கள் இதனை சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில் படித்து வைத்தால் கதை முடிந்தது. திங்கட்கிழமை அந்தப் பங்கை நிறையப் பேர் தின வர்த்தக அடிப்படையில் வாங்கினால் பங்கின் விலை தரகு நிறுவனம் சொன்ன இலக்கு விலையை உடனே எட்டி விடும். இதனை உயர் விலைத் திறப்பு (gap up opening) என்று சொல்வார்கள். இது ஒரு விதமான சுய நிறைவேற்ற தீர்க்கதரிசனம் (self fulfilling prophecy) மட்டுமே. அந்த மதிப்பு (?) என்பது உடனே மறைந்து விடும். அந்த வகையில் மதிப்பு முதலீட்டின் மாண்புகளைப் பற்றி பெஞ்சமின் கிரகாம் முதல் வாரன் பஃபெட் ஈறாக மலைப் பிரசங்கம் செய்யாத குறையாகக் கூறினாலும் அதனை யாரும் பின்பற்றாததால் அதன் மதிப்பு இன்னும் மங்காமல் உள்ளது. இதனை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பங்குச்சந்தையில் நிறையப் பேர் ஒரு செயலைச் செய்தால் அந்த வாணிப வாய்ப்பு உடனே மங்கி மறைந்து விடும். மதிப்பு முதலீடு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான அடிப்படையான காரணம் என்னவென்றால் நிறையப் பேர் அதனை இன்னும் பின்பற்றவில்லை.

தினசரி வர்த்தகத்தில் இன்னும் நிறையக் கூத்துக்கள் நிகழும். ஒரு நிறுவனம் கடந்த காலாண்டில் நல்ல இலாபம் ஈட்டியிருக்கும். சந்தையில் அந்தப் பங்கின் விலை இறங்கி விடும். கேட்டால் சந்தை இன்னும் இலாபத்தை எதிர்பார்த்தது என்பதாகச் சொல்வார்கள். இன்னொரு நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும். பங்கின் விலை ஏறிய வண்ணமாக இருக்கும். கேட்டால் சந்தை எதிர்பார்த்த அளவிற்கு நஷ்டம் இல்லை என்பதாகச் சொல்வார்கள். தினசரி வணிகம் செய்யும் என் நண்பர் ஒருவரின் புகார் என்னவென்றால் அவர் ஒரு நிறுவனப் பங்கை வாங்க முடிவு செய்து வாங்க எத்தனிக்கையில் பங்கின் விலை கூடி விடுகிறது. அதே மாதிரி அவர் ஒரு நிறுவனப் பங்கை விற்க எத்தனிக்கையில் பங்கின் விலை அதல பாதாளத்திற்குச் சென்று விடுகிறது. யாரோ திட்டம் போட்டு என்னைக் கவிழ்த்து விடுகிறார்கள் என்று புலம்பிய வண்ணம் இருப்பார். என்ன நடந்திருக்கும் என்றால் அவர் வாங்க முனையும் போது ஒரு  மொத்தக் கொள்முதல் (bulk order execution) நடந்திருக்கும். அதனால் சந்தையில் அந்தப் பங்குகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து பங்கின் விலை கூடியிருக்கும். அதே மாதிரி அவர் விற்க முனைகையில் ஒரு மொத்த விற்பனை நடந்திருக்கும். இவை எல்லாமே தற்செயல் நிகழ்வுகள். தின வர்த்தகத்தில் இந்தத் தற்செயல் நிகழ்வுகளின் தாக்கத்தைக் தவிர்க்கவே முடியாது. ஷேக்ஸ்பியர் சொல்வது மாதிரி Life is a tale told by an idiot full of sound and fury signifying nothing என்பது தினசரி வாழ்க்கைக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தினசரி வணிகத்திற்கு அப்படியே பொருந்தும். மேலும் தினசரி வர்த்தகம் ஒரு சுழி விளைவு வினை (zero sum game) பெரும்பாலும் ஒருவரின் இலாபம் பிறிதொருவரின் நஷ்டமாகவே முடியும். நீண்ட கால முதலீடு அப்படி அல்ல. ஒருவர் ஒரு பங்கை 100 ரூபாய்க்கு வாங்குகிறார். இன்னொருவருக்கு 120 ரூபாய்க்கு விற்கிறார். அந்த இன்னொருவர் மற்றொருவருக்கு 140 ரூபாய்க்கு விற்கிறார். அனைவருக்குமே இலாபம் கிடைக்கப் பெறுகிறது. ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது . ICICI வங்கிப் பங்கை அதன் IPO வில் ஒரு பங்கு 35 ரூபாய் என்ற கணக்கில் 100 பங்குகளை 3500 ரூபாய்க்கு வாங்கி இன்றளவும் வைத்திருப்பதாகவும் அந்த 35 ரூபாய் பங்கின் தற்போதைய விலை 2700 ரூபாய் என்பதாகவும் நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் ஒரு கேள்வி கேட்டார். முதலில் அவர் கேட்ட கேள்வி எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. பிறகு ரொம்பவும் மெனக்கெட்டு நான் புரிந்து கொண்டது என்னவென்றால், ICICI வங்கிப் பங்கு ஒரே நேர்கோட்டில் 35 ரூபாயில் இருந்து 2700 ரூபாய்க்கு வந்து விடவில்லை. 35 ரூபாயிலிருந்து 50 ரூபாய் பின்னர் 40 பிறகு 60 என்பதாக ஏறி இறங்கி , இறங்கி ஏறி பின்னர் இன்று 2700 ரூபாய்க்கு விற்கிறது. 3500 ரூபாய்க்கு வாங்கிய பங்கை 5000 ரூபாய்க்கு விற்று விட வேண்டும். பின்னர் 4000 க்கு வாங்கி 6000 க்கு விற்று விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் எவ்வளவு இலாபம் கிடைத்திருக்கும் என்பதாகக் கேட்டதும் எனக்குத் தலையே சுற்றியது. நண்பர் சொல்வது எவ்வளவு சாத்தியம் என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.

ஒரு நிறுவனத்தின் IPO வில் நீங்கள் பங்கு கொண்டால் அதன் முதல் உருவாக்கத்தில் (capital formation) நீங்கள் பங்கு பெறுவதாக அர்த்தம். பங்குச்சந்தையின் முதலும் முடிவுமான அடிப்படையே இது தான். பின்னர் அந்த நிறுவனம் வளரும் போது நீங்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தால் நிறுவனத்துடன் இணைந்து நீங்களும் வளரலாம். இவ்விதம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் நாம் பங்கு பெறலாம். முதலாளித்துவம் நமக்குக் கொடுத்த அருட்கொடைகளில் ஒன்று பங்குச்சந்தை. அதன் முதல் உருவாக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் பங்கு பெறாமல் பங்குகளை வாங்கவும் விற்கவுமாக இருந்தால் என்ன மதிப்பு உருவாக்கம் பெறும்? மேலும் இந்த நிகழ்வின் உராய்வுச் செலவுகளை மட்டும் கணக்கிட்டுப் பாருங்கள். முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி வைத்திருப்பதான  கால அளவு மென்மேலும் குறைந்த வண்ணமாக உள்ளது. இந்தக் கால அளவும் உராய்வுச் செலவுகளும் எதிரெதிராக இணைந்திருக்கின்றன. கால அளவு குறைந்தால் உராய்வுச் செலவு கூடும். சித்தாடு காப்பணம், செம கூலி முக்காப் பணம் என்று சொல்வார்கள். உலகம் முழுவதுமான பங்குச்சந்தைகளின் இந்த உராய்வுச் செலவிற்கான பணம் மட்டும் பல பில்லியன் டாலர்களைத் தொடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணம் முதல் உருவாக்கத்தில் பங்கு பெற்றால் உலகம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும் என்று சற்றே எண்ணிப்பாருங்கள்.

பங்குச்சந்தையில் 100 மடங்காளர் 1000 மடங்காளர் 5000 மடங்காளர் ஏன் அதற்கும் மேல் அதிகமான முதலீட்டுப் பெருக்கத்தை அடைந்த பங்குகள் இன்றளவும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. விப்ரோ பங்கு அதன் முதல் பொது வெளியீட்டிலிருந்து 22 இலட்சம் மடங்கிற்கு மேல் கூடியிருக்கிறது . ஆம் , நீங்கள் படித்தது சரி தான் . மிகவும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால் 2235906.33 மடங்கு கூடியிருக்கிறது . பத்து ரூபாய் பங்கை பனிரெண்டு ரூபாய்க்கு விற்றால் பன்மடங்காளர்களை (Multibaggers) எவ்விதம் கைப்பற்ற முடியும்?

தினசரி வணிகத்தின் இரண்டு முக்கியமான கருவிகள் குறித்து சற்றே பார்க்கலாம். முதலாவது stop loss அதாவது நஷ்டம் தவிர்த்தல். இரண்டாவது target price அதாவது இலாபத்தைப் பிடித்தல். நான் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்குகளை வாங்கிய தினத்தன்று மதியம் மூன்று மணி வாக்கில் பங்குச்சந்தையில் திடுதிப்பென்று ஒரு மிகப்பெரிய சரிவு. Trade + 2 என்ற அடிப்படையில் பங்குகளை வாங்கிய பின்னர் இரண்டு நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தினால் போதுமானது. ஆனால் அன்று மாலைக்குள் காசோலையைச் செலுத்தச் சொல்லி பங்குத் தரகர் அலுவலகத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பு. சந்தை திடீரென விழுந்து விட்டதால் சற்று எச்சரிக்கை உணர்வுடன் காசோலையை முன்னரே வாங்குவதாகச் சொன்னார்கள். அன்று நான் வாங்கிய பங்கு இருபது சதவீதம் இறங்கி விட்டது. நான் முதலிலேயே stop loss போட்டிருந்தால் இவ்விதம் ஆகியிருக்காது என்று காசோலையை வாங்க நேரில் வந்த தரகர் அலுவலக அலுவலர் சொன்னதோடு மட்டுமின்றி என்னை ' ஙே' என்று ஒரு பார்வை பார்த்துச் சென்றார். இந்த இடத்தில் எனக்கு ஒன்று புரியவில்லை. எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்கு 150 ரூபாய் என்ற விலையில் ஒரு மதிப்பு முதலீடு. அது ஒரு பங்குச்சந்தை சரிவில் துர(அ)திருஷ்டவசமாக இருபது சதவிகிதத்தை இழந்து விட்டது. அது வெறும் விலை வீழ்ச்சி (quotational loss) மட்டுமே. மதிப்பு வீழ்ச்சி அல்ல. இன்னும் சொல்லப்போனால் இருபது சதவிகிதத்தை இழந்த பின்னர் அதன் உள்ளார்ந்த மதிப்பு இன்னும் கூடியிருக்கிறது. நாம் விலை வீழ்ச்சியை மறந்து விட்டு அந்தப் பங்கை இன்னும் கூடுதல் எண்ணிக்கையில் வாங்குவது தான் ஒரு அறிவார்ந்த செயலாக இருக்க முடியும். அதை விடுத்து நஷ்டம் தவிர்த்தல் என்ற செயல் முறையானதா? கொஞ்ச நாட்கள் கழித்து எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் பங்கு புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் சென்றதும் தரகர் அலுவலகத்திலிருந்து மீண்டும் ஒரு அழைப்பு. இந்த மாதிரி இந்தப் பங்கின் விலை இலக்கைத் தொட்டு விட்டதாகவும், இலாபத்தைக் கைப்பற்றிக் கொள்ளுமாறும் ஒரு அறிவுரை. இந்தியாவில் வீடு கட்ட கடன் கொடுக்கும் நிறுவனங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. பங்குச்சந்தையில் அவசரப்பட்டு இலாபம் ஈட்டுவதால் கூட மிகப்பெரிய நஷ்டங்களை அடைய முடியும். இவ்வாறாக தினசரி வணிகத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு மிக முக்கியமான கருவிகளும் முனை மழுங்கியவையாக உள்ளன.

இந்தப் பதிவை காய்கறி விற்பனையாளர் மற்றும் தட்டச்சு வணிகருடன் தொடங்கினோம். இந்த இருவரும் தத்தமது வணிகத்தில் ஈடுபட அவர்கள் தின அடிப்படையில் அந்த வேலையில் இருந்தே ஆகவேண்டும். ஒருநாள் அவர்கள் வேலைக்கு வரவில்லையென்றால் அன்றைய வருமானம் கிடைக்கப்பெறாது. பங்குச்சந்தை தினசரி வணிகமும் அவ்வாறே தான். நீண்ட கால வணிகத்தில் நீங்கள் அங்கே இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. இது ஒரு மிக முக்கியமான வேறுபாடு.

தினசரி வணிகத்தில் ஈடுபடுபவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு என்று சொல்வதை விட கணினியையும் சேர்த்து மூன்று என்று சொல்வது தான் சரி. தினசரி வணிகத்தில் கணினி எங்கே வந்தது? Algorithmic trading என்றெல்லாம் சொல்கிறார்கள். அதாவது பங்குச்சந்தையின் சின்னச்சின்ன விலை வித்தியாசங்களை கணினியே இனங்கண்டு பணமாக்கம் செய்து விடுவது தான் Algo trading. இரண்டாவதாக நிறுவனம் சார்ந்த தினசரி வணிகர்கள். இவர்களுடைய வீச்சு வேற லெவலில் இருக்கும். பங்குச்சந்தையில் நல்ல செய்தியாக இருந்தாலும் சரி அல்லது கெட்ட செய்தியாக இருந்தாலும் சரி இவர்களுக்கு வந்த பிறகு தான் மற்றவர்களுக்கு வரும். கணினி மற்றும் நிறுவன வணிகர்களுடன் போட்டி போடுவது என்பது முடியாது என்பதற்கு அடுத்தது (next to impossible) ஆக, தினசரி வணிகத்தைக் கற்றுத் தெளிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எவ்வளவு பெரிய எண்ணையும் பூஜ்யத்தால் பெருக்கினால் பூஜ்யம் மட்டுமே வரும்.

பங்குச்சந்தை முதலீடு என்பது  மாறக்கூடிய தன்மை கொண்ட ஒரு முதலீடு (variable investment) அதில் தின அடிப்படையில் ஒரு நிச்சயத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எப்போது எதிர்பார்க்கலாம் என்றால், பல்லாண்டுகள் கழித்து பங்காதாயம் மூலமாக... அப்போதும் பங்காதாயம் மாதாமாதம் என்றோ அல்லது தினமுமோ வராது. மீண்டும் நமது பழைய பல்லவியை நினைவு கூரலாம். பணவீக்கத்தை வெல்லும் வகையிலான அதிகரித்து வரும் பங்காதாயம், இந்த அதிகரித்து வரும் பங்காதாயங்களைக் கொடுக்கக்கூடிய பங்குகளின் வாயிலான முதலீட்டுப்பெருக்கம் என்ற நிதி விடுதலை நிலையை அடைந்த பின்னர் முறையான விலக்கல் திட்டம் (systematic withdrawal Plan) ஒன்றைத் தொடங்கி உங்கள் நிதித்தொகுப்பிலிருந்து மாதம் 4 சதவீதம் என்ற அளவில் பணவிலக்கல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

அடிப்படையாக முதலீடு என்றால் என்ன? நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை பிந்தைய நாட்களின் தேவைகளுக்காக ஒதுக்கி வைப்பது. இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப்பணம் பணவீக்கத்தை வெல்லும் வகையில் நமக்குச் சம்பாதித்துக் கொடுப்பதை உறுதி செய்வது . அதற்குப் பங்குச்சந்தையிலான நீண்ட கால முதலீடுகள் மட்டும் தான் ஒரேயொரு சரியான வழி (one and only right way) காய்கறி விற்பனையாளர் மற்றும் தட்டச்சு வணிகர் உட்பட யாவரும் இதில் பங்கு பெறலாம். வெறுமனே மாதம் 500 ரூபாய் முதலீட்டில் சென்செக்ஸ் முதலான குறியீட்டு பரஸ்பர நிதிகளை வாங்கினாலே போதுமானது. நீண்ட கால அடிப்படையில் கூட்டு வட்டி தன் வேலையைச் செவ்வனே செய்து விடும். சென்செக்ஸ் அதனை நிறுவிய நாளிலிருந்து நாளது தேதி வரை சராசரியாக 15 சதவீத CAGR கொடுத்திருக்கிறது.

தினசரி வர்த்தகத்தின் ஒரேயொரு பயன் என்னவென்றால் நீர்மை நிறை உருவாக்கம் (liquidity generation) மட்டும் தான். ஒரு நிறுவனத்தின் நிறையப் பங்குகள் சந்தையில் தினசரி வர்த்தகமானால் பங்குகளை வாங்குவதும் விற்பதும் எளிது.

தினசரி வணிகம் என்பது மின்மினி வேட்டை. குறுகிய கால வணிகம் என்பது குருவி வேட்டை. நீண்ட கால வணிகம் என்பது யானை வேட்டை. யானை வேட்டைக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

அருமைப்பாடு சாய்வு

பங்குச்சந்தை பதில்கள் - 14