வாய்ப்பு விலை - 2
வாய்ப்பு விலை - 2
Opportunity Cost - 2
ஒருவர் பணத்தைக் கடுகு டப்பாவில் போட்டு வைத்திருக்கிறார். இன்னொருவர் கொஞ்சம் தைரியமானவர். வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கிறார். மற்றொருவர் கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார். பிறிதொருவர் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலிட்டிருக்கிறார். ஐந்தாமவர் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார். இந்த ஐவரும் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாகக் கொண்டு இந்த ஐவருக்கும் வாய்ப்பு விலை போட்டுப் பார்க்கலாம்.
கடுகு டப்பாவில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர் தான் ஆகப்பெரிய அபாயத்தில் இருக்கிறார் (ஆனால் அவர் அபாயத்தைத் தவிர்த்து விட்டதான தவறான புரிதலில் இருக்கிறார்) ஒரு வருட முடிவில் இவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும். (பண வீக்கத்தைக் கணக்கில் கொள்ளவில்லை)
வங்கி சேமிப்புக் கணக்கில் பணத்தை இட்டவருக்கு 2.75 சதவீத வட்டி என்று கொண்டால் அவரிடம் ஒரு வருட முடிவில் 102750 ரூபாய் இருக்கும்.
கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவருக்கு 6 சதவீத வட்டி என்று கொண்டால் 106000 ரூபாய்.
பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள் 15 சதவீதம் தருவதாகக் கொண்டால் 115000 ரூபாய் கிடைக்கப்பெறும்.
நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்தவர் 20 சதவீதம் என்ற அளவீட்டில் 120000 ரூபாய் கிடைக்கப் பெறுவார்.
இதில் பரஸ்பர நிதி மற்றும் பங்குகளுக்கான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடையாது. ஒரு வருட முடிவில் முதலுக்கே மோசம் நேரலாம். இந்த 15 மற்றும் 20 சதவீத வருமானம் என்பது நீண்ட கால சராசரியைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
பங்குகளில் முதலீடு செய்யாமல் கடுகு டப்பாவில் பணத்தைப் போட்டு வைத்திருப்பதற்கான வாய்ப்பு விலை 20000 ரூபாய்.
சேமிப்புக் கணக்கில் பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்கான வாய்ப்பு விலை 17250 ரூபாய்.
கடன் பத்திர முதலீட்டாளருக்கான வாய்ப்பு விலை 14000 ரூபாய்.
பரஸ்பர நிதி முதலீட்டிற்கான வாய்ப்பு விலை 5000 ரூபாய்.
இந்த வாய்ப்பு விலை ஒரு வருடத்திற்கு மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது. வருடாவருடம் இந்த வாய்ப்பு விலை கூட்டுப் பெருக்கம் அடையும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
பங்குகளையும் நன்கு அலசி ஆராய்ந்து தான் முதலீடு செய்ய வேண்டும். ஒருவர் (ஒருவர் என்ன ஒருவர்? அது சாட்சாத் நானே தான்) HDFC வங்கியில் முதலீடு செய்யாமல் ICICI வங்கிப் பங்கில் முதலீடு செய்ததற்கான வாய்ப்பு விலையைக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
HDFC வங்கியும் ICICI வங்கியும் 1995 ல் பொதுப் பங்கு வெளியீட்டை முதன்முறையாக மேற்கொண்டன. HDFC வங்கி பத்து ரூபாய் என்ற முக மதிப்பிற்கே பங்குகளை வெளியிட்டது. ICICI வங்கி பத்து ரூபாய் பங்கை பத்து ரூபாய் முக மதிப்பிலும் 25 ரூபாய் உயர் மதிப்பிலுமாக (Premium) 35 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டது. பங்குகளை விற்கும் போது உங்கள் இலாபம் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக பங்குகளை வாங்கும் போது தான் உங்களுக்கான இலாபம் தீர்மானிக்கப்படுகிறது. HDFC வங்கிப்பங்கை முக மதிப்பான பத்து ரூபாய் என்ற விலையில் வாங்கியவர்களுக்கு தொடக்கத்திலேயே ஒரு ஆரம்ப ஆதாயம் கிடைத்து விடுகிறது. இந்த முக மதிப்பான பத்து ரூபாய்க்குத் தான் நிறுவனம் பங்காதாயம் (Dividend) வழங்கும். ICICI வங்கிப் பங்கை 35 ரூபாய் என்ற விலையில் வாங்கினாலும் முக மதிப்பான பத்து ரூபாய்க்கு மட்டுமே பங்காதாயம் கிடைக்கப்பெறும். 25 ரூபாய்க்கு ஒன்றும் கிடையாது. HDFC வங்கி பத்து சதவீதம் பங்காதாயம் கொடுத்தால் முக மதிப்பில் வாங்கியவர்களுக்கு பங்காதாயம் மற்றும் பங்கு ஈட்டு விகிதம் (Dividend Yield) இரண்டும் பத்து சதவீதம். ஆனால் ICICI வங்கி பத்து சதவீதம் பங்காதாயம் கொடுத்தால் பங்காதாயம் பத்து சதவீதம். ஆனால் பங்கு ஈட்டு விகிதம் வெறும் 2.85 சதவீதம் மட்டுமே (25 ரூபாய்க்கு எதுவும் கிடையாது) பங்குகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த விலையில் வாங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பங்கு ஈட்டு விகிதம் கூடுதலாகக் கிடைக்கும். முக மதிப்பில் வாங்கினால் பங்காதாயமும் பங்கு ஈட்டு விகிதமும் சமம். முக மதிப்பிற்கும் குறைவாக எவரேனும் வாங்கியிருந்தால் அவர்களுக்கு பங்காதாயத்தை விட பங்கு ஈட்டு விகிதம் கூடுதலாகக் கிடைக்கும். பங்கு விலை, பங்காதாயம் மற்றும் பங்கு ஈட்டு விகிதம் இந்த மூன்றுக்குமான இணைப்பைக் கவனத்தில் கொள்ளவும்.
HDFC வங்கி வருடாவருடம் தொடர்ச்சியாக இருபது சதவீதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. மேலும் வாராக் கடன் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. நிறுவனத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. பங்குச்சந்தையில் இந்த மாதிரியான நிறுவனப் பங்குகள் உயர் மதிப்பீட்டில் வர்த்தகமாகும். HDFC வங்கியின் விலை- வருவாய் விகிதம் (PE - Price Earning Multiple) சராசரியாக 30 என்ற மதிப்பீட்டில் வர்த்தமாகிறது. ICICI வங்கியின் வருமானம் HDFC வங்கி மாதிரி ஒரே சீராக இல்லை. மேலும் வாராக் கடன் பிரச்னை, CEO ஊழல்... எனவே சந்தை அதற்கு PE மதிப்பு குறைவாகவே கொடுக்கிறது. HDFC வங்கி ஒரே சீராக ஆண்டாண்டு 20 சதவீத CAGR என்ற அளவில் வளர்ந்து வந்ததால் அதன் ஒரு பங்குச் சம்பாத்தியம் (EPS - Earnings Per Share) மீமிகைப் பெருக்கத்திற்கு உள்ளாகி இரண்டு நிறுவனங்களும் தற்போது இரண்டு சதவீத PE வித்தியாசத்தில் வர்த்தகமானாலும் HDFC வங்கியின் மதிப்பு எங்கேயோ போய் விட்டது .
HDFC வங்கியின் பங்காதாயம் தொடர்ந்து வளர்ந்த வண்ணம் உள்ளது. 2021 ஆம் வருடத்திற்கான பங்காதாயம் 650 சதவீதம். ICICI வங்கி சமீப காலமாகப் பங்காதாயத்தைக் குறைத்து விட்டது.
HDFC வங்கியின் துணை நிறுவனமான HDB Financial Services நிறுவன IPO விரைவில் வெளிவர உள்ளது. அவ்விதம் வெளிவந்தால் மதிப்புத்திறப்பு (Value Unlocking) என்ற நோக்கில் HDFC வங்கியின் மதிப்பு நீண்ட கால அடிப்படையில் கூடுவதற்கான வாய்ப்பு அதிகம். ICICI வங்கியின் துணை நிறுவனங்களான ICICI Prudential Life Insurance , ICICI Lombard General Insurance , ICICI Securities முதலானவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டன. அந்த நிறுவனங்களின் உட்கிடக்கை மதிப்பையும் (Embedded Value) சேர்த்துத் தான் ICICI வங்கி உயர் மதிப்பீட்டில் வர்த்தமாகிறது.
பொதுப் பங்கு வெளியீட்டிலிருந்து HDFC வங்கி 32.48 சதவீத CAGR கொடுத்திருக்கிறது. மாறாக ICICI வங்கி 19.43 சதவீத CAGR மட்டுமே கொடுத்திருக்கிறது. HDFC வங்கி 1500 bagger. ICICI வங்கி 101 bagger மட்டுமே. வெறும் 13.05 சதவீத வேறுபாடு நீண்ட கால அடிப்படையில் 1399 bagger வேறுபாடாகப் பல்கிப் பெருகுவதைக் கவனியுங்கள்.
HDFC வங்கியில் 3500 ரூபாய் முதலீடு செய்யாமல் ICICI வங்கியில் முதலீடு செய்ததன் காரணமான எனக்கான இன்றைய வாய்ப்பு விலை 4896350 ரூபாய். காலம் செல்லச் செல்ல இந்த வாய்ப்பு விலையின் மதிப்பு கூடிக் கொண்டே செல்லும். அதனால் தான் வாரன் பஃபெட் விதி எண் 1: பணத்தை இழக்காதே / விதி எண் 2: விதி எண் 1 ஐ மறக்காதே என்பதாகக் கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment